சிக்கிமின் முக்கிய நகரங்களுள் ஒன்றான ஜோர்தாங்க், டீஸ்டா நதியின் துணையாறான ரங்கீத் ஆற்றுக்கு அருகில், பெல்லிங்க் என்னும் நகருக்கு போகும் வழியில் அமைந்துள்ளது.
கலிம்பாங்க், சிலிகுரி மற்றும் டார்ஜிலிங்கிலிருந்து பெல்லிங்க் செல்லும் வழியில், கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் உயரத்தில் அமையப்பெற்றுள்ள ஜோர்தாங்க், ரங்கீத் நதிக்கு மேலே, மலையடிவாரத்தில் அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
ஜோர்தாங்கை சில கிலோமீட்டர்கள் கடந்து சென்றால், சுற்றுலாப்பயணிகளைக் கவரும், வெந்நீர் ஊற்றுக்களைக் காணலாம். ஜோர்தாங்கில் கொண்டாடப்படும் மகே மேளா என்னும் விழா, நீங்கள் ஜனவரி மாதங்களில் இப்பகுதியில் இருந்தால் அவசியம் கண்டு களிக்கவேண்டிய ஒரு விழாவாகும்.
ஜோர்தாங்கிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், ஆற்றில் படகு சவாரி செய்தும், மலையேற்றத்தில் ஈடுபட்டும் பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.
மகே மேளா என்னும் விழா, ஆண்டுதோறும் ஜனவரி மாதங்களில், இங்கு மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இப்பகுதியில் வசித்துவரும் மக்களின் பெருமைக்குரிய கலாச்சாரத்தினையும் பண்பாட்டினையும், சுற்றுலாப்பயணிகளுக்கு எடுத்துரைத்து அறிமுகப்படுத்தும் வகையில், இவ்விழா ஆண்டு தோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது. 1955 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வேளாண்மைத் திருவிழாவிலிருந்து இந்த மேளா கொண்டாடப்படத் தொடங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மகே மேளா என்னும் கலாச்சாரத் திருவிழா சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகவும் பிரசித்தமானது. சிக்கிம் மக்களின் கலாச்சாரத்தை எடுத்துக்கூறும், ஜோர்தங்க் மாரத்தான், ஃபேஷன் ஷோக்கள், கலாச்சார நடனப்போட்டிகள், பலூனில் பறத்தல், சறுக்கு விமானத்தில் பறத்தல், படகு சவாரி செய்தல், அழகிப்போட்டிகள், வில்வித்தைப்போட்டிகள் எனப் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் இவ்விழாவில் நடைபெறும்.
இந்தியாவின் முக்கியமான அனைத்து நகரங்களிலிருந்தும், வான் வழியாகவும், இரயில் மற்றும் சாலைவழியாகவும் ஜோர்தாங்கை சுலபமாக அடையலாம். மேலும் ஜோர்தாங்க்கில் ஆண்டுதோறும் மிக இனிமையான காலநிலை நிலவுவதால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு சுற்றுலா வரலாம்.