அஸ்ஸாம் மாநிலத்தின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் குறித்து தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த அஸ்ஸாம் ஸ்டேட் மியூசியம் எனும் அருங்காட்சியகத்திற்கு விஜயம் செய்வது மிகவும் அவசியம்.
இது குவஹாத்தி நகரத்தின் மையப்பகுதியில் திக்காலிபுக்குரி குளத்தின் தெற்கு முனையில் அமைந்திருக்கிறது. அஸ்ஸாம் ஸ்டேட் மியூசியத்தில் தொல்பொருட்கள், கல்வெட்டுக்குறிப்புகள், புராதன நாணயச்சேகரிப்புகள், சிலைகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
அஸ்ஸாம் ஸ்டேட் மியூசியம் 1940-ம் ஆண்டில் காமரூப அனுசந்தன் சமிதி (அஸ்ஸாம் ரிசர்ச் சொசைட்டி) எனும் அமைப்பினால் கட்டப்பட்டிருக்கிறது.
துவக்கத்தில் இந்த தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமாக இருந்த இந்த அருங்காட்சியகம் 1953ம் ஆண்டு அரசாங்கத்தின் பொறுப்பிற்கு மாற்றப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தை நிறுவிய அறங்காவலர் மறைந்த கன்க்லால் பருவா என்பவராவார்.
இந்த அருங்காட்சியகம் பல சுவாரசியமான புராதன அஸ்ஸாமிய நாணய சேகரிப்புகள், பழங்குடி கலைப்பொருட்கள், சிலைகள் மற்றும் பாரம்பரிய நெசவுத்துணி வகைகள் போன்றவற்றை கொண்டுள்ளது.
மாநிலத்தின் கலாச்சாரம் பாரம்பரியம் போன்றவற்றை காக்கும் விதத்தில் கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி கண்காட்சிகள் போன்றவை இந்த அருங்காட்சியகத்தில் நடத்தப்படுகின்றன.
செவ்வாய் முதல் ஞாயிறு வரை காலை 10 மணியிலிருந்து 5 மணி வரை இந்த அருங்காட்சியகம் திறக்கப்படுகிறது. நகரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளதால் பயணிகள் எளிதாக இந்த அருங்காட்சியகத்துக்கு விஜயம் செய்ய முடியும்.