ஜெயின் ஜம்பூத்வீப் மந்திர் எனும் இந்த ஜைனக்கோயிலானது பெரிதும் மதிக்கப்பட்ட ஜைன சாத்வி பரம் பூஜ்ய ஷிரோன்மணி ஷீ கியான்மதி மாதாஜி அவர்களின் முழு முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த சாத்வி 1965ம் ஆண்டு விந்தியமலையில் பஹவான் பஹுபாலி சிலைக்கு கீழே தியானத்தில் ஈடுபட்டிருந்தபோது அவரது ஞானப்பார்வையில் 13 தீவுகளை உள்ளடக்கிய தேராத்வீப் எனப்படும் மத்தியலோகம் தோன்றியதாக சொல்லப்படுகிறது.
இந்த சாத்வி கண்டதைப்போன்ற ஒரு மத்தியலோகம் பற்றிய விவரணம் தில்யோபன்னாடி மற்றும் திரிலோக்சார் போன்ற 2000 ஆண்டு பழமையான ஜைன ஆகமங்களில் இருப்பதும் உறுதிசெய்யப்பட்டது.
முதலாம் தீர்த்தங்கரான ரிஷபதேவர் என்பவரும் இது போன்ற மத்யலோக காட்சியை சுமேரு மலையில் தனது தவக்கனவில் கண்டுள்ளார்.
எனவே அது போன்ற ஒரு மத்யலோகத்தை ஸ்தாபிக்க வேண்டி அதற்கான தகுந்த இடத்திற்காக இந்த சாத்வி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இறுதியாக அவர் இந்த ஹஸ்தினாபூர் நகரத்தை வந்தடைந்து இதுவே தனது கனவு லோகத்தை சிருஷ்டிப்பதற்கு ஏற்ற இடம் என்று முடிவு செய்து கொண்டார். அதற்கான அடிக்கல் 1974ம் ஆண்டில் நாட்டப்பட்டு அதன் கட்டுமானம் 1985ம் ஆண்டு முடிவுற்றது.
ஜைன மார்க்கத்தினர் நம்பும் புவியியல் அமைப்பின் மாதிரி வடிவமாக இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இதன் மையத்தில் 101 அடி உயரமுள்ள சுமேரு பர்வத் அமைப்பும் அதை சுற்றி 250 அடி விட்டமுள்ள ஜம்புத்வீப் அமைப்பு நான்கு திசைகளிலுமான தனி மண்டலங்களுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.