இடுக்கியிலிருந்து 1.5 கி.மீ தூரத்திலேயே இந்த ஹில் வியூ பார்க் அமைந்துள்ளது. 8 ஏக்கர் பரப்பளவில் ஒரு மலைப்பாறைத் திட்டின்மீது இந்த பூங்கா காணப்படுகிறது. இயற்கையாகவே உருவாகிய ஒரு ஏரி ஒன்றும் இதனுள்ளே எழிலைக்கூட்டும் விதத்தில் காட்சியளிக்கிறது.
பெயருக்கேற்றபடியே இந்த பூங்காவிலிருந்து சுற்றுலுமுள்ள இயற்கை எழில் காட்சிகளை பார்த்து ரசிக்க முடிவது இதன் விசேஷம். காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் போன்றவை அவற்றின் இயற்கையான வாழ்விடச்சூழலில் நடமாடுவதை இந்த பூங்காவிலிருந்து நன்றாக பார்த்து ரசிக்கலாம்.
தவிர, பூங்காவிலுள்ள ஏரியில் படகுச்சவாரி செல்வது மற்றொரு உற்சாகமூட்டும் பொழுதுபோக்காகவும் இருக்கும். இங்குள்ள ஒரு மூலிகைத்தோட்டத்துக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம்.
சிறு குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கென்றே ஒரு விளையாட்டுப்பூங்காவும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணை மற்றும் செறுதோணி அணைக்கு அருகிலேயே இந்த ஹில் வியூ பார்க் அமைந்திருப்பதால் இங்கிருந்து அந்த அணைப்பகுதிகளை பார்த்து ரசிப்பது பிரமிப்பூட்டும் அனுபமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
மேலும், இந்த மலைப்பூங்கா அணையின் நீர்மட்டப்பகுதியிலிருந்து 350 அடி உயரத்தில் மேலே அமைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்தலத்துக்கு விஜயம் செய்யும்போது பைனாகுலர்கள், கேமராக்கள் ஆகியவற்றுடன் செல்வதும் அவசியம். இங்கு நாம் காணும் எழிற்காட்சிகளை படங்களாக பதிவு செய்துகொள்வது என்றும் பார்த்து நினைத்து மகிழ உதவியாக இருக்கும்.