இடுக்கி மாவட்டத்தில் அவசியம் பார்க்க வேண்டிய எழிற்தலங்களில் இந்த ராமக்கல்மேடு என்றழைக்கப்படும் மலைவாசஸ்தலமும் ஒன்றாகும். மாசு மறுவற்ற ஒரு வண்ண ஓவியம் போன்று கண்களுக்கு விருந்தாய் வீற்றிருக்கும் இயற்கையின் வனப்பை இங்கு தரிசிக்கலாம். குறத்திமகள் சிலை ஒன்று குறவர் இனத்தாரின் அடையாளமாக இங்கு அமைந்துள்ளது.
ராமக்கல்மேடு எனும் பெயருக்கு ராமபிரானின் பாதம் பட்ட மண் என்பது பொருளாகும். மனைவியாகிய சீதாதேவியை தேடி ராமர் இப்பகுதிக்கு வந்தபோது இந்த மலையில் அவர் காலடி பட்டதால் இம்மலைப்பகுதி ராமக்கால்மேடு என்று அழைக்கப்படுவதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.
கடல் மட்டத்திலிருந்து 3500 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை வாசஸ்தலம் மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாகும். இந்த மலையிலிருந்து ஒரு புறம் கேரள பூமியின் வனப்பையும் மறு புறம் தமிழ்நாட்டின் எழிலையும் ரசிக்க முடிவதை இதன் சிறப்பம்சமாக சொல்லலாம்.
பருவநிலை பாராது எப்போதும் வீசும் இதமான காற்றை இப்பகுதியில் அனுபவிக்கலாம். இந்த காற்றுச்சக்தியை ஆக்க சக்தியாக மாற்றும் நோக்கத்துடன் ஒரு காற்றாலை மின்னுற்பத்தி பண்ணையும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.