ஜான்ஸி, உத்தரப்பிரதேசத்தின் பந்தல்கண்ட் பகுதிக்கான நுழைவு வாயிலாகக் கருதப்படுகிறது. சந்தேலாக்களின் ஆட்சிக்காலத்தின் போது தான் இது தன் புகழின் உச்சத்தை எட்டியுள்ளது. ஆனால் 11 ஆம் நூற்றாண்டு வாக்கில் ஆரம்பித்த சந்தேலா ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்குப் பின் இதன் புகழும் மங்க ஆரம்பித்திருக்கிறது. 17 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற ராஜா பிர் சிங் தியோவின் ஆட்சிக்காலத்தின் போது இதன் புகழ் மீண்டும் தழைத்தோங்கியுள்ளது. இந்த ராஜா, முகாலயப் பேரரசரான ஜஹாங்கீருக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததாகக் கருதப்படுகிறது.
ஜான்ஸியின் புகழுக்கான பிரதான காரணகர்த்தாவாக விளங்குபவர், 1857 ஆம் ஆண்டு ஆங்கிலேயரை எதிர்த்து நடைபெற்ற முதல் விடுதலைப் போரில் தன் படைகளை திறம்பட வழிநடத்திய, ஆக்ரோஷமான ஆட்சியாளராக விளங்கிய ராணி லக்ஷ்மிபாய் ஆவார்.
லக்ஷ்மிபாய், ஜான்ஸியின் ராஜா கங்காதருக்கு மணம் முடித்து வைக்கப்பட்டார். ஆனால் அவர்களுக்கு வாரிசு இல்லாதிருந்தது.இதனை காரணம் காட்டி ஆங்கிலேயர் ராணி லக்ஷ்மிபாய் ஆட்சிக்கட்டிலில் இருந்து இறங்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்தனர்.
ஆனால் லக்ஷ்மிபாய், 1857 ஆம் ஆண்டு ஜான்ஸி கோட்டையைக் கைப்பற்றும் பொருட்டு எதிர் தாக்குதல் நிகழ்த்தினார். அப்போது நடைபெற்ற போரில் அவர் தன் தத்து மகனுடன் தப்பித்து குவாலியரின் இராணுவப் படையுடன் சேரும் பொருட்டு செல்லும்போது வழியிலேயே தன் மரணத்தை எதிர்கொண்டார்.
ராணி லக்ஷ்மிபாய், இந்தியாவின் ஜோன் ஆஃப் ஆர்க் என்று பரவலாக போற்றப்பட்டார். ஜான்ஸி, அதன் வரலாற்றுப் பெருமை தவிர்த்து, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி-மார்ச் மாதங்களின் போது கொண்டாடப்படும் ஜான்ஸி திருவிழாவுக்காகவும் பிரசித்தி பெற்றுள்ளது.
ஜான்ஸி மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்
ஜான்ஸியின் பெரும்பாலான ஈர்ப்புகள் சரித்திரத்தன்மை வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன. ராணி லக்ஷ்மிபாய் ஆங்கிலேயப் படைகளை எதிர்த்து போர் புரிந்த இடமான ஜான்ஸி கோட்டை கம்பீரமான முக்கிய ஈர்ப்பாகத் திகழ்கிறது.
பரிச்சா என்ற பெயரைக் கொண்ட இயற்கைக் காட்சிகள் நிறைந்த ஒரு அணைக்கட்டுக்கும், கோயில், மசூதி, புத்த விகாரம் ஆகியவற்றைக் கொண்டுள்ள, இதே பெயரில் வழங்கப்படும், இம்மாவட்டத்தில் அமைந்த ஒரு குடியிருப்புக்கும் நீங்கள் சென்று வரலாம்.
ஜான்ஸி அருங்காட்சியகத்துக்கு சென்று பார்ப்பதன் மூலம் இப்பகுதியின் பெருமைமிகு பழங்காலத்தைப் பற்றிய ஆழ்ந்த அறிவைப் பெறலாம். ராணி மஹால், அதன் பெயரே உரைப்பது போல், ராணி லக்ஷ்மிபாயின் அரண்மனையாகும்.
இந்திய விடுதலைப் போரில் பங்கேற்ற பல்வேறு பிரமுகர்களும் ராணியை இந்த அரண்மனையில் தான் வந்து பார்த்துச் செல்வர். மேலும், பெட்வா நதியின் கரையோரங்களில் அமைந்துள்ள பருவா சாகார் ஏரியையும் பார்த்து வரலாம்.
பிரபல கவிஞரான மைதிலி ஷரன் குப்தா அவர்களின் பிறப்பிடமான, சிர்கோன் இதற்கு அருகாமையிலேயே அமைந்துள்ளது. ஓர்ச்சா அதன் கோட்டைக்காகவும், ஜான்ஸியின் சிவில் லைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் ஜியூட்ஸ் தேவாலயம், கத்தோலிக்கக் கிறித்துவர்களிடையேயும், மிகவும் புகழ் பெற்று விளங்குகின்றன.
மேலும் நீங்கள் ஜான்ஸியில், மஹாராஜா கங்காதர் ராவின் சாத்ரி, கணேஷ் மந்திர் மற்றும் மஹாலக்ஷ்மி கோயில் போன்ற இடங்களுக்கும் சென்று பார்க்கலாம். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜான்ஸி மஹோத்ஸவ், இப்பகுதியின் கலைகள் மற்றும் கைவினைத் தொழில்களைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பை வழங்குகின்றது.
ஜான்ஸியை எவ்வாறு அடையலாம்?
ஜான்ஸியை சாலை, இரயில் மற்றும் வான் வழி சேவைகள் மூலம் அடையலாம். குவாலியரில் உள்ள விமான நிலையமே இதற்கு அருகில் உள்ள விமான நிலையம் ஆகும்.
ஜான்ஸி செல்ல ஏற்ற காலம்
நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலமே ஜான்ஸி செல்வதற்கு ஏற்ற காலகட்டம் ஆகும்.