கடப்பா நகரில் 1982-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பகவான் மஹாவீர் அருங்காட்சியகம், ஜைன மதத்தின் சிறப்புகளை உலகுக்கு எடுத்துச் சொல்லும் உன்னத சாட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்த அருங்காட்சியகத்தில் கற்கள், வெண்கலம், களிமண் ஆகியவற்றை கொண்டு உருவாக்கப்பட்ட சிற்பங்களும், கல்வெட்டுகள் சிலவற்றையும் நீங்கள் பார்த்து ரசிக்கலாம்.
இவை யாவும் இந்தியாவில் ஜைன மதம் தழைத்தோங்கி இருந்த காலத்தை சேர்ந்தவைகள் ஆகும். அதோடு இந்த தொன்மை வாய்ந்த கலைப்பொருட்கள் யாவும் 5-ஆம் மற்றும் 18-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் ஜைன மதம் தழைத்தோங்கியிருந்த நண்டலூர், குண்ட்லூரு, திம்மையாபலேம், மண்டமம்பள்ளி, போளி, கொளத்தூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து கொண்டுவரப்பட்டவை.
அதுமட்டுமல்லாமல் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் கலைப்பொருட்களில் பெரும்பாலானவை தொல்பொருள் ஆய்வில் மண்ணுக்கு அடியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டவை.
பகவான் மஹாவீர் அருங்காட்சியகத்தில் யானை காலுடன் காட்சியளிக்கும் பிள்ளையார் சிலை, பின்னப்பட்ட கூந்தலோடு தோற்றமளிக்கும் ஹனுமான், தலையிலிருந்து கங்கை கொட்டுவதற்கு பதிலாக பக்கங்களிருந்து கொட்டும் கங்கா நதியுடன் கூடிய சிவன் சிலை என்று சில வினோதமான சிற்பங்களை பயணிகள் இங்கு பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications