கந்தமால் மாவட்டத்தில் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இந்த தரிங்பாடி எனும் மலை ஸ்தலம் அமைந்திருக்கிறது. இது புல்பணியிலிருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 915 மீ உயரத்தில் அமைந்திருக்கும் இந்த தரிங்பாடி மலைவாசஸ்தலத்திற்கு ‘ஒரிஸாவின் காஷ்மீர்’ என்ற சிறப்புப்பெயரும் உண்டு. அந்த பெயருக்கேற்றபடி இங்கு பைன் மரக்காடுகள், காபி தோட்டங்கள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகள் போன்றவை நிரம்பியுள்ளன.
கோடைக்காலத்தில் இப்பகுதியில் மிகக்குறைந்த வெப்பநிலை நிலவுவதால் இது பிரசித்தமான கோடைவாசஸ்தலமாகவும் விளங்குகிறது. கோடைக்காலத்தில் இங்கு வெப்பநிலை 0°C வரை சரிந்து காணப்படுகிறது. பொதுவாக இங்கு காடுகள் மற்றும் காட்டுயிர் அம்சங்கள் அதிகமாக நிரம்பியுள்ளன.
அவ்வளவாக வெளிச்சத்திற்கு வராத பல நீர்வீழ்ச்சிகளையும் இந்த வனப்பகுதிகள் கொண்டுள்ளன. இங்கு ஒரு மலையுச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் மலைக்காட்சி தளத்திலிருந்து சுற்றிலும் காணப்படும் பல்வேறு எழிற்காட்சிகளை சுற்றுலாப்பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.
டோலுரி எனும் ஆறு மலைப்பள்ளத்தாக்குகளின் வழியே ஓடுவது இப்பகுதியின் அழகை மேலும் கூட்டுகிறது. பயணிகளின் வசதிக்காக இந்த வனப்பகுதியின் உள்ளே ஒரு ஓய்வு இல்லமும் அமைக்கப்பட்டிருக்கிறது.
இங்குள்ள இயற்கைச் செழிப்பு மற்றும் காட்டு வளம் போன்றவற்றை ரசிப்பதற்காக உலகில் பல பகுதிகளிலிருந்தும் இயற்கை ஆர்வலர்கள் வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.