கண்ணுடையநாயகி கோயில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம், காரைக்குடிக்கு அருகாமையில் உள்ளது. இக்கோயில் சுயம்புமூர்த்தியாகக் கருதப்படும், கண்ணுடையநாயகி அம்மனுக்காக எழுப்பப்பட்டதாகும்.
இதன் தனிச்சிறப்பு, இதன் கட்டுமானத்தில் உள்ளது. இங்குள்ள கூடங்கள் விசாலமானவைகளாகவும், கம்பீரமானவைகளாகவும் திகழ்கின்றன. இக்கோயிலின், சந்நிதி, மஹாமண்டபம், அர்த்தமண்டபம் ஆகியன, நகரத்தார்கள் இங்கு வருவதற்கு முன் இப்பகுதியை ஆண்ட மன்னர்களால் கட்டப்பட்டுள்ளன.
அதற்கு பின் நகரத்தார்கள், இக்கோயிலில் மேலும் பல கட்டிடங்களை எழுப்பி இன்றுள்ள தோற்றம் கிடைக்கச் செய்தனர். கோயிலின் மத்தியில் ஒரு மண்டபத்தையும், ஒரு பெரிய கோயில் கோபுரத்தையும் கட்டினர்.
இவை, இக்கோயிலின் பிரம்மாண்டத்தைக் கூட்டும் வகையில் அமைந்துள்ளன. இவர்கள் “சொக்கட்டான்சேரி” என்ற பெயரில் ஒரு சிறப்பு மண்டபத்தையும் அமைத்துள்ளனர்.
இம்மண்டபம், கண்ணைக் கவரும் கட்டிடக்கலை மற்றும் கைவண்ண்ம் ஆகியவற்றுக்கு சிறப்பான எடுத்துக்காட்டாக உள்ளது. நகரத்தார்கள், மரம், வெள்ளி மற்றும் அற்புத கற்களினால் ஆன, ஏராளமான வாகனங்களை, இக்கோயில் பிரகாரத்தில் நிறுவியுள்ளனர்.