மத்திய பிரதேச மாநிலம், கிழக்கு நிமார் மாவட்டத்தில் இருக்கும் அழகிய நகரம் கந்த்வா. பல கோவில்களையும், புண்ணிய தளங்களையும் கொண்ட பழமையான நகரம் கந்த்வா. 12 ஆம் நூற்றாண்டில் ஜைன சமய எழுச்சி அடைந்த போது, கந்த்வா நகரம், ஜைன சமயத்தின் மையமாகத் திகழ்ந்தது. காலத்திற்கேற்ப பல மாறுதல்களைச் சந்தித்த கந்த்வா நகரம், பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் நிமாத் பகுதியின் முக்கிய வர்த்தக மையமாக செயல்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற பாடகர் கிஷோர் குமார் இங்கு தான் பிறந்தார் என்பது கூடுதல் தகவல்.
கந்த்வாவை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்
கந்த்வாவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல அம்சங்கள் உள்ளன. நகரின் மையப்பகுதியில் கந்தாகர் எனும் பிரமிப்பூட்டும் மணிக்கூண்டு அமைந்துள்ளது. இது மட்டுமல்லாமல், கந்த்வாவில் தொன்மையான தீர்த்த குண்டங்கள் அல்லது குளங்கள் பல உள்ளன.
கந்தாகரைச் சுற்றிலும் நான்கு தீர்த்த குண்டங்கள் அமைந்திருக்கின்றன. மாவட்டக் கலெக்டர் அலுவலக கட்டிடம், ஆங்கிலேயரின் கட்டிடக்கலைக்கு ஆதாரமாக விளங்குகிறது. சுற்றுலாப் பயணிகள், புதுமையும் பழமையும் கலந்த இந்த அழகிய கட்டிடத்தை காண ஆர்வத்தோடு வருகின்றனர்.
தொன்மை வாய்ந்த கோவில்களையும், புண்ணியத் திருத்தளங்கள் பலவற்றையும் கொண்ட அழகிய நகரம் கந்த்வா. இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தளமான பவானி மாதா திருக்கோவில் கந்த்வாவில் அமைந்திருக்கிரது.
மேலும், இங்கிருக்கும் முக்கியமான புண்ணியத் திருத்தளம் தாதா தர்பார். இது மட்டுமல்லாமல், நவ சந்தி தேவி தாம் என்ற திருவிழாவில் திருவிழாவில் கலந்துகொள்ள பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர்.
கந்த்வாவில் இருந்து சுமார் 89 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது ஓம்காரேஷ்வரர் மந்தாதா. இவ்விடம் இந்துக்களுக்கும், ஜைனர்களுக்கும் ஆன்மீகத் தலமாக விளங்குகிறது.
சித்தாவர் குட் மற்றும் மாமலேஷ்வர் திருக்கோவில் இங்கு அமைந்துள்ளது. சித்தாவர் குட் ஜைனர்களுக்கும், மாமலேஷ்வர் திருக்கோவில் இந்துக்களுக்கும் முக்கியமான வழிபாட்டுத் தலமாக திகழ்கிறது.
டெக்கானின் கண்கள் என்று வர்ணிக்கபடும் ஆசிகர் கோட்டை, கந்த்வா நகரின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து ஆசிகர் கோட்டையின் அழகை ரசித்துச் செல்கின்றனர்.
அதோடு பிரபல பாடகர் கிஷோர் குமாரின் மணிமண்டபமான கௌரி குஞ் எனும் இடத்தில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழியும்.
கந்த்வாவில் பல அணைகள் உள்ளன. அவற்றில் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்தது இந்திரா சாகர் அணையும், நக்சுன் அணையும் ஆகும்.
கந்த்வாவை அடைவது எப்படி?
விமானம், ரயில் மற்றும் சாலை வழியாக கந்த்வாவை எளிதில் அடைய முடியும். இங்கிருக்கும் ரயில் நிலையம், பிரதான ரயில் சந்திப்பு நிலையமாகும். அக்டோபம் முதல் மார்ச் வரை, அருமையான மிதமான வெப்பம் நிலவும். இந்த சமயத்தில் கந்த்வாவை சுற்றிப் பார்ப்பது நன்றாக இருக்கும்.