பெயருக்கேற்றபடியே இவை சீனாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட மீன்பிடி வலை அமைப்புகளாகும். சீன யாத்ரீகரான ஜெங் ஹே என்பவரால் இவை கொச்சி கடற்கரைப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 14ம் நூற்றாண்டு வாக்கில் கொச்சி துறைமுகப்பகுதியில் இந்த வலையமைப்புகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இன்று வரை அவை உபயோகத்தில் இருப்பது தொடர்கிறது.
வைப்பீன் தீவுப்பகுதி மற்றும் கொச்சி கோட்டைப்பகுதியின் கடற்கரையில் இந்த மீன்பிடி வலை அமைப்புகளை அதிகமாக பார்க்கலாம். மூங்கில் அல்லது தேக்கு மரத் தாங்கிகளுடன் இணைக்கப்பட்டு தொட்டில்கள் போன்று இந்த சீன மீன்பிடி வலைகள் அந்தரத்தில் தொங்குகின்றன.
உள்ளூர் மக்களால் சீனாவாலா என்று இந்த வலைகள் அழைக்கப்படுகின்றன. இவற்றை பயன்படுத்தி மீன் பிடிக்கும் தொழில் நுட்பமானது இங்குள்ள பாரம்பரிய முறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.
இந்த சீனவலைகளை மேலே தூக்குவதற்கு ஆறு பேர் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வலைகளை பார்ப்பதற்கும் மீன் பிடித்தலில் பங்கேற்பதற்கும் பயணிகள் அதிக அளவில் இந்த கடற்கரைப்பகுதிகளுக்கு வருகை தருகின்றனர்.