அமைதியான சிறு நகரமான ‘கோலார்’ கர்நாடக மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. 3,969 கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படும் இது தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் இது கர்நாடகாவின் கிழக்கு வாசல் என்று அழைக்கப்படுகிறது. தற்சமயம் தங்கத்துக்கு இது பெயர் பெற்றிருந்தாலும் ஒருகாலத்தில் இந்த நகரத்திற்கென்று ஒரு பொற்கால வரலாறும் இருந்துள்ளது. இன்றளவும் உள்ள கம்பீரமான கோயில்களும் கோட்டைகளும் அந்த வரலாறுக்கு சான்றாக விளங்குகின்றன.
கோலார் பற்றிய புராணிகக் கதைகள்
கோலார் பற்றி கூறப்படும் புராணிகக் கதைகளில் முக்கியமானது ஆதி காலத்து முனிவர் வால்மீகி வாழ்ந்த இடம் இது என்பதாகும். வனவாசத்தின்போது ராமபிரான் இங்கு விஜயம் செய்த தாகவும் பின்னர் சீதா தேவி ராமபிரானால் விலக்கி வைக்கப்பட்ட போது தன் இரு குழந்தைகளான லவா மற்றும் குசாவுடன் இங்கு வால்மீகியின் ஆசிரமத்தில் சீதாதேவி கழித்ததாகவும் நம்பப்படுகிறது.
கோலாரின் மேற்குப்பகுதியில் பசுமையான மலைப்பகுதியில் வீர முனிவர் பரசுராம் வசித்ததாகவும் சொல்லப்படுகிறது.
பதிவு செய்யப்பட்ட வரலாறு என்று பார்த்தால் கோலார் என்ற பெயரிலேயே அதன் வரலாறு பொதிந்துள்ளது. முற்காலத்தில் கோலாஹளபுரா– மூர்க்கமான நகரம் (கன்னட மொழியில்) என்ற பெயரில் இது அழைக்கப் பட்டுள்ளது.
அது பின்னர் குவலலா, கோலலா என்றெல்லாம் திரிந்து கோலார் என்று மாறியுள்ளது. குளுமையான மலைகளைக்கொண்ட இந்த சிறிய நகரம் சோழ அரசர்களுக்கும் சாளுக்கிய வம்சத்தினருக்கும் இடையே நடந்த பல உக்கிரமான போர்களை கண்டுள்ளது.
ஒரு மகோன்னதமான வரலாற்றின் மிச்ச சொச்சங்களை இன்னமும் இந்த நகரத்தில் பார்க்க முடிகிறது. கோலாரம்மா மற்றும் சோமேஷ்வரர் கோயில்கள் இங்கு முக்கியமான பார்க்க வேண்டிய இடங்களாகும். சுற்றுலாப் பயணிகளுக்காக பாராசூட் பறப்பு மற்றும் பாறையேற்றம் போன்ற பொழுது போக்குகள் இங்கு உள்ளன.



Click it and Unblock the Notifications