ஓச்சிரா எனும் இந்த சிறிய நகரமானது ஆலப்புழா மற்றும் கொல்லம் மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் கொல்லம் நகரிலிருந்து 55 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. முக்கியமான ஆன்மீக ஸ்தலமாகவும், யாத்திரை ஸ்தலமாகவும் பிரசித்தி பெற்றுள்ள இந்நகரத்தில் எண்ணற்ற புராதனக்கோயில்களும் வரலாற்றுச் சின்னங்களும் நிறைந்துள்ளன.
இங்குள்ள கோயில்களில் மிகப்பிரசித்தமானது ‘ஓச்சிரா கோயில்’ அல்லது பரப்பிரம்மா கோயில் என்றழைக்கப்படும் கோயிலாகும். பரப்பிரம்மம் அல்லது ‘ஓம்காரம்’ எனும் ஐதீக அம்சத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள இக்கோயில் கேரளாவிலுள்ள மற்ற கோயில்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும்.
36 ஏக்கர் பரப்பளவில் பிரமிப்பூட்டும் இயற்கை எழில் நிறைந்த பிரதேசத்தில் எழுப்பப்பட்டுள்ள இக்கோயிலை நாடி தென்னிந்தியா முழுவதிலிருந்தும் பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர்.
இக்கோயில் ஸ்தலத்தில் ஜுன் – ஜுலை மாதத்தில் ‘ஓச்சிரகளி’ எனும் வருடாந்திர திருவிழாவானது பண்டைய காலத்தில் நிகழ்ந்த ஒரு போரின் நினைவாக கொண்டாடப்படுகிறது.
இத்திருவிழாவின் போது இரு குழுக்கள் வாட்களை வைத்துக்கொண்டு சண்டையிடுவது போன்று ஒரு சடங்கு அனுஷ்டிக்கப்படுவதை பார்வையாளர்கள் திரளாக ரசித்து மகிழ்கின்றனர். தவிர, அச்சமயம் கால்நடை சந்தையும் இந்த விழாவின் ஒரு அங்கமாக நடத்தப்படுகிறது.
ஓச்சிரா முஸ்லிம் மஸ்ஜித் எனும் மசூதி ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட புராதன சின்னமாக அறியப்படுகிறது.