கொல்லம் பீச் அல்லது மஹாத்மா காந்தி பீச் என்று அழைக்கப்படுகிற இந்த கொல்லம் கடற்கரையானது நீண்டு பரந்திருக்கும் மணற்பரப்புடன் கூடிய கண்களை கொள்ளை கொள்ளும் ஒரு கடற்கரையாகும். கொல்லம் பகுதியின் முக்கியமான பொழுதுபோக்கு ஸ்தலமாக அறியப்படும் இந்த கடற்கரையானது கொல்லம் நகர மையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் கொச்சுபிலாமூடு எனும் இடத்தில் உள்ளது.
கடற்கரைக்கு அருகிலேயே மஹாத்மா காந்தி பார்க் எனப்படும் பூங்கா ஒன்றும் உள்ளது. அமைதியாக நடை பழகவும் இளைப்பாறவும் ஏற்ற இடமாக இது காட்சியளிக்கிறது. சூரிய ஒளியில் தகதகக்கும், அலைப்பரப்பையும், அசைந்தாடும் ஈச்சமரங்களையும், வெண் மணல் கரையையும் பார்த்து ரசிக்கும் விதத்தில் இந்த கடற்கரைப்பகுதியும் அதனோடு இணைந்த பூங்காவும் அமைந்துள்ளன. மாலை நேரத்தில் இப்பகுதிக்கு விஜயம் செய்து ரசிப்பது புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாகும்.
அமைதியும் இயற்கை வனப்பும் கலந்த ரம்மியமான சூழலுடன் காட்சியளிக்கும் இந்த கடற்கரைப்பகுதி விடுமுறைச்சுற்றுலாவுக்கு மிகவும் ஏற்ற ஸ்தலமாகும். சாதாரணக் கட்டணங்களைக் கொண்ட விடுதிகளும், சொகுசு வசதிகளைக்கொண்ட ரிசார்ட் விடுதிகளும் ஏராளமாக இந்த கடற்கரைப்பகுதியில் உள்ளன.
இது நீந்திக்குளிப்பதற்கு ஏற்ற பாதுகாப்பான கடற்கரையாகவும் உள்ளது ஒரு கூடுதல் விசேஷமாகும். ஒரு இனிய மாலை நேரத்தை கொல்லம் கடற்கரையில் கழித்துவிட்டு திரும்பும்போது சுற்றுலாக்களைப்பை எல்லாம் மீறி உடலும் மனமும் புத்துணர்ச்சியடைந்திருப்பதை இங்கு வருகை தரும்போது அனுபவித்து உணர்வீர்கள்.