சுற்றுலாப்பயணிகள் இயற்கையின் களங்கமடையாத வனப்பை வெகு அருகில் தரிசிக்கும் ஒரு அற்புதமான வாய்ப்பை இந்த அஷ்டமுடி உப்பங்கழி நீர்த்தேக்கம் வழங்குகிறது.
அஷ்டமுடி எனும் நன்னீர் ஏரியின் நீட்சியாக இந்த உப்பங்கழி தோன்றியுள்ளது. இது கேரளாவிலேயே மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும். இந்த ஏரித்தேக்கத்தில் படகு வீடுகளில் பயணம் செய்தபடியே சுற்றிலுமுள்ள தென்னந்தோப்புகளையும், பனந்தோப்புகளையும், பசுமையான இயற்கை வனப்பையும் ஏகாந்தமாக பார்த்து ரசிக்கும் அனுபவத்துக்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்றே சொல்லலாம்.
அப்படி ஒரு இணையிலா அனுபவத்தை தரும் ‘படகுவீடு சுற்றுலா’ எனப்படும் படகுப்பயணமே அஷ்டமுடி உப்பங்கழி நீர்த்தேக்கம் வழங்கும் பிரதான விசேஷமாகும். கொல்லம் சுற்றுலா வளர்ச்சிக்குழுமம் இதற்காக பலவகையான வசதிகளுடன் கூடிய வித விதமான படகு வீடுகளை ஏற்பாடு செய்துள்ளது. பகல் பயணம் அல்லது இரவுத் தங்கலுடன் கூடிய சுற்றுலா வசதிகளை பயணிகள் தங்கள் வசதிப்படி தேர்வு செய்து கொள்ளலாம்.
பிரமிப்பூட்டும் நவீன வசதிகளுடன் இந்த படகு வீடுகள் உருவாக்கப்பட்டிருப்பது பயணிகளை மலைக்க வைக்கும் ஒரு காட்சியாகும். அலங்கரிக்கப்பட்ட படுக்கை அறைகள், சமையலறை, வேடிக்கை பார்க்க பலகணி போன்ற அமைப்பு மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றை இந்த படகு வீடுகள் கொண்டுள்ளன.
ஏராளமான தனியார் ‘ரிசார்ட் விடுமுறை பொழுதுபோக்கு விடுதி’களும் இப்பகுதியில் அமைந்திருப்பதோடு அவை தம் விருந்தினர்களுக்கு ஸ்பா எனப்படும் நீராவிக்குளியல், ஆயுர்வேதிக் மசாஜ் மற்றும் படகுவிருந்து போன்ற பிரத்யேக சொகுசு சேவைகளை அளிக்கின்றன.