குமரகத்திற்கு அருகிலுள்ள முக்கியமான ஆன்மீகஸ்தலமாக இந்த ஏட்டுமானூர் மஹாதேவா கோயில் பிரசித்தி பெற்றுள்ளது. கோட்டயம் நகரிலிருந்து 2 கி.மீ தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது.
கேரளாவிலுள்ள மிகப்பழமையான சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி செல்லும் வரலாற்றுப்பின்னணியை கொண்டுள்ள இந்த கோயில் ஏராளமான பக்தர்களை ஈர்க்கிறது.
இந்த கோயிலின் ஆதி கட்டமைப்பானது 1542ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டு தற்போதுள்ள கட்டமைப்பை பெற்றதாக சொல்லப்படுகிறது. இதிலுள்ள சுவரோவியங்கள் மற்றும் அவற்றுள் குறிப்பிடத்தக்க பிரதோஷ நிருத்தம் (சிவ தாண்டவம்) எனும் ஓவியம் ஆகியவை பிரசித்தமாக பேசப்படுகின்றன. நாட்டிலுள்ள மிகச்சிறந்த புராதன சுவரோவியங்களில் ஒன்றாக இவை கருதப்படுகின்றன.
இந்த கோயில் வளாகத்தில் ஒரு கருவறை, சிவன் சிலை, விநாயகர் மற்றும் சாஸ்தாவுக்கான சன்னதிகள், ஒரு தங்கக்கொடி கம்பம் மற்றும் வெண்கலத்தால் வேயப்பட்ட கூரைகள் ஆகிய அம்சங்கள் நிறைந்துள்ளன.
இக்கோயிலில் வருடாந்திரமாக பிப்ரவரி-மார்ச் மாதத்தில் கொண்டாடப்படும் ஆராட்டு திருவிழா மிக முக்கியமான திருவிழாவாக கருதப்படுகிறது. கேரளாவிலுள்ள செல்வம் படைத்த கோயில்களில் ஒன்றாக கருதப்படும் இந்த ஏட்டுமானூர் மஹாதேவா கோயிலில் துலாபாரம் எனப்படும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஏராளமான பக்தர்கள் விஜயம் செய்வது குறிப்பிடத்தக்கது.