ரூமி தார்வாஸா அல்லது துர்க்கிஷ் கேட் என்று அழைக்கப்படும் நுழைவாயில் அமைப்பு 13ம் நூற்றாண்டைச்சேர்ந்த முஸ்லிம் சூஃபி ஞானியான ஜலாலுதீன் முஹமத் ரூமி என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
இந்த 60 அடி உயர நகரவாயில் 1784ம் ஆண்டு ஆசஃப் உத் தௌலா எனும் நவாப்பால் கட்டப்பட்டிருக்கிறது. லக்னோ நகரின் நுழைவாயிலாக அமைந்திருக்கும் இது ஆவாத் வம்சத்திய கட்டிடக்கலை பாணிக்கு ஒரு எடுத்துக்காட்டாக வீற்றிருக்கிறது.
இந்த அமைப்பின் உச்சியில் ஒரு பெரிய விளக்கு அக்காலத்தில் நவாப்களின் ஆட்சியின்போது ஏற்றப்பட்டு வந்திருக்கிறது. வாயிலுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருக்கும் மொட்டுகள் போன்ற நீரூற்றுகள் வழியாக வெளிப்படும் நீர்த்தாரைகள் இந்த விளக்கு வெளிச்சத்தில் மிக கவர்ச்சியாக தோற்றமளித்திருக்கின்றன.
இந்த வாயிலை பிரபலப்படுத்திய பெருமை அந்நாளைய நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையாளரான ரஸ்ஸல் என்பவரையே சாரும். இவர் லக்னோவின் 1858ம் வருட வரலாற்றுச்சம்பவங்களின்போது செய்தி திரட்டியவராவார்.
இந்த ரூமி தார்வாஸாவிலிருந்து சத்தர் மான்ஸில் எனும் மாளிகை வரை ஆங்கிலேயப்படையினர் கடந்து சென்ற காட்சியை விவரிக்கும்போது அவர் “ ரோம், பாரிஸ், லண்டன் மற்றும் கான்ஸ்டான்டிநோபிள் போன்ற நகரங்களை விடவும் ஒரு அற்புதத்தோற்றத்துடன் இந்த லக்னோ பகுதி காட்சியளித்தது” என்று எழுதியுள்ளார்.