கேரளாவின் பிருந்தாவனம் என்று அழைக்கப்படும் மலம்புழா கார்டனுக்கு நீங்கள் வரும் போது இயற்கையின் அற்புதமும், மனிதனின் படைப்பாற்றலும் கைகோர்த்து காட்சியளிக்கும் புதுமையின் அழகை கண்டு சொக்கிப் போவது நிச்சயம்.
இங்கு உள்ள ஆடம்பரமான புல்வெளிகள், கவின் கொஞ்சும் மலர்ப்படுக்கைகள், அற்புத நீரூற்றுகள், கண்கவர் குளங்கள் என்று ஒவ்வொன்றும் உங்கள் மனதை மயக்கும் ஓவியங்களாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.
இவைதவிர இதன் வளாகத்தில் அமைந்திருக்கும் குழந்தைகள் பூங்காவில் உங்களுடைய செல்லக் குழந்தைகள் மகிழ்ச்சியோடு பொழுதை கழிக்கலாம்.
மலம்புழா கார்டன் வளாகத்தில் காணக்கூடிய மற்ற பிற கவர்ச்சி அம்சங்களாக அக்குவாரியம், ஏரியல் ரோப்வே, யக்ஷி சிலை, ராக் கார்டன், ரோஸ் கார்டன், நீச்சல் குளம் போன்றவை அறியப்படுகின்றன.
இந்த தோட்டத்தில் மனித உழைப்பினால் உருவான கால்வாயில் நீங்கள் படகுப் பயணம் செய்து பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.
அதோடு தோட்டத்தை சுற்றி அமைந்துள்ள விசாலமான நடைபாதயில் நீங்கள் ஒரு சிறு உலா சென்று தோட்டத்தில் கொட்டிக் கிடக்கும் பேரழகினை பரிபூரணமாக ரசிக்கலாம்.
மேலும் குடிதண்ணீர், உணவுக் குடில்கள், ஷாப்பிங் பகுதிகள், ஓய்வு அறைகள், கண்காணிப்பு மையங்கள் போன்ற கூடுதல் வசதிகளும் மலம்புழா தோட்டங்களில் பயணிகளின் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
மலம்புழா கார்டன் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இரவு 7 மணியிலிருந்து 8 மணி வரை மின்விளக்குகளால் தகதகவென்று ஒளிரும் எழில்மிகும் காட்சியை கண்டு ரசிப்பதற்காகவே இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.



Click it and Unblock the Notifications