அருணாசலபிரதேச மாநிலத்திலுள்ள மற்றும் ஒரு அழகு நகரமாக இந்த நம்போங் நகரம் வீற்றிருக்கிறது. பங்சாவ் பாஸ் எனும் மலைப்பாதைக்கு அருகில் சங்லாங் மாவட்டத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 308 மீ உயரத்தில் உள்ள இது அக்காலத்தில் லெடோ சாலை அல்லது ஸ்டில்வெல் சாலை என்றழைக்கப்பட்ட ஒரு பயங்கரமான சாலைக்கு அருகில் உள்ளது.
இந்த சாலையில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்பட்டு இயற்கைச்சீரழிவுகள் நிலவியதால் ‘நரகப்பாதை’ என்று இது ஒரு காலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவின் கிழக்கு மூலையில் உள்ள கடைசி நகரம் என்ற அடையாளத்தையும் இந்த நம்போங் நகரம் கொண்டுள்ளது.
இது மியான்மர் நாட்டு எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது. ஒவ்வொரு மாதமும் இப்பகுதியில் உள்ள பங்க்சா மலைப்பாதை வழியாக மக்கள் மியான்மர் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
நம்போங் நகரத்தில் டங்ஸா இனத்தார் அதிகமாக வசிக்கின்றனர். தவிர திக்காக், முக்லோம், ஹவி, லோங்சாங், மொஸ்ஸாங், ஜுக்லி, கிம்சிங், பொந்தாய், சங்வால் ஆகிய இனங்களை சேர்ந்த மக்களும் இந்நகரத்தில் வசிக்கின்றனர்.
இவர்கள் யாவரும் மங்கலாய்ட் மனித இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மியான்மரிலுள்ள மசோய் சினருபம் எனும் மலைப்பகுதி டங்க்ஸா இனத்தாரின் ஆதி இருப்பிடமாக கருதப்படுகிறது. காலப்போக்கில் அவர்கள் இடம் பெயர்ந்து 18ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த நம்போங் பகுதிக்கு வந்துள்ளனர்.
துவக்க காலத்தின் இந்த இனத்தார் போன் எனப்படும் மத நம்பிக்கையை பின்பற்றிவந்துள்ளனர். இந்த மரபில் விலங்குகளை பலியிடும் சடங்குகள் இருந்து வந்திருக்கின்றன.
பின்னர் இவர்கள் புத்த மதம் மற்றும் கிறித்துவம் போன்ற மதங்களுக்கு மாறி விட்டனர். ஒற்றுமையான, கடும் உழைப்பாளிகளாக காணப்படும் இந்த பூர்வ குடி மக்கள் கைவினைப்பொருட்கள் மற்றும் மரவேலைப்பாட்டுப்பொருட்கள் தயாரிப்பில் சிறந்து விளங்குகின்றனர்.
அன்பான உபசரிப்பு குணத்தையும் இவர்கள் பெற்றுள்ளனர். பங்சாவ் பாஸ் குளிர்காலத்திருவிழா எனும் கொண்டாட்டம் இப்பகுதியின் பிரசித்தமான திருவிழாவாக புகழ் பெற்றுள்ளது. இது ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் 20, 21 மற்றும் 22 வது தேதிகளில் கொண்டாடப்படுகிறது.



Click it and Unblock the Notifications