மைசூருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய மற்றுமொரு தொன்மை வாய்ந்த பாரம்பரிய கட்டிடம் இந்த லலிதா மஹால் ஆகும். இது சாமுண்டி மலையின் மீது அமைந்துள்ளது.
இந்த மாளிகை 1921 ஆம் ஆண்டு மஹாராஜா நான்காம் கிருஷ்ணராஜ உடையாரால் அப்போதைய இந்திய வைஸிராய்க்காக கட்டப்பட்டதாகும். மும்பையை சேர்ந்த E.W.பிரிட்ச்லீ என்ற கட்டிடக் கலை வடிவமைப்பாளர் இந்த மாளிகையை வடிவமைத்துள்ளார்.
இந்த மாளிகை நவீன பாணியையும் ஆங்கிலேய மெனார் பாணியையும் இத்தாலியன் பலாஸோ கட்டிட முறையையும் கலந்து கட்டப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த மாளிகை இந்திய அரசாங்கத்தின் சுற்றுலாத் துறையின் மூலம் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த மாளிகையின் அரச பரம்பரை வரலாற்றுக்கேற்ப அதிலுள்ள இப்போதைய ஐந்து நட்சத்திர ஹோட்டல் விருந்தினர்களை பாரம்பரிய பாணியில் உபசரித்து சேவைகளை வழங்குகிறது.இந்த மாளிகை ஒரு ஹோட்டலாக மாற்றப்பட்ட போதிலும் பழைய அரண்மனை தோற்றத்தில் எந்த மாறுதலும் செய்யப்பட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. வைசிராய் அறை, நடன அரங்கம் மற்றும் விருந்து அரங்கு மற்றும் இத்தாலியன் சலவைக்கல்லால் ஆன படிக்கட்டுகள் ஆகியவை இன்றும் அப்படியே இருக்கின்றன. நடன அரங்கும், விருந்து அரங்கும் தற்சமயம் முறையே உணவு அரங்காகவும், கூட்ட அரங்காகவும் பயன்படுத்தப் படுகின்றன.
பழைய தொன்மையான ஓவியங்கள், இருக்கைகள் போன்றவற்றை அப்படியே பயன்படுத்தியிருந்தாலும் விருந்தினர் சௌகரியங்களை கருதி நவீன சாதனங்களும் இப்போதைய ஹோட்டலில் அதன் இயல்பு கெடாமல் இடம் பெற்றுள்ளன.
விருந்தினர்களான சுற்றுலா பயணிகள் இந்த ஹோட்டலில் நடத்தப்படும் மாலை நேர திறந்த வெளி விருந்து கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மகிழலாம். மாளிகையின் (ஹோட்டல்) முன்புறம் பசுமையான புல்வெளியில் நீரூற்றுகளும் கார்களை நிறுத்த நிறைய இடமும் காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications