யணிகளின் வசதியை மேம்படுத்துவதையும், குறிப்பாக உச்ச பயண காலங்களில் கூட்ட நெரிசலைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு வைகை மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்துள்ளது தெற்கு ரயில்வே! முழு கொள்ளளவில் இயங்கி வரும் இந்த ரயில்களில் செல்லும் பயணிகள் நீண்ட நாட்களாக கூடுதல் பெட்டிகளை இணைக்குமாறு கோரிக்கை வைத்து வந்த நிலையில் தற்போது இரு ரயில்களிலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதனை பயணிகள் வெகுவாக வரவேற்று வருகின்றனர்!
மேம்பட்ட பயணத்தை வழங்க முடிவு
உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில்வேயாக தினமும் 12,000 க்கும் மேற்ப்பட்ட ரயில்களை இயக்கி, ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகளுக்கு சேவை செய்து வரும் இந்திய ரயில்வே அவ்வப்போது பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த பல முயற்சிகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரயில்வே மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மக்களுக்கு சேவை செய்யப்பட்டு வருகிறது. அந்தந்த மண்டலங்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில்களும், புதிய சேவைகளும், கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்பட்டு வருகின்றன.
கூடுதலாக ஒரு பெட்டி இணைப்பு
சென்னையிலிருந்து அதிகப்படியான பயணிகள் பயணம் செய்யும் ரயில்களில் மதுரை - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வைகை விரைவு ரயில், சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் ஆகியவை அடங்கும். முழுக் கொள்ளளவில் இயங்கி வரும் பகல் நேர விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பொது பெட்டி இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
முழுக் கொள்ளளவில் இயங்கி வரும் இரு ரயில்கள்
சென்னை எழும்பூரில் துவங்கும் வைகை எக்ஸ்பிரஸ் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் வழியாக மதுரை சந்திப்பை சென்றடைகிறது. வைகை எக்ஸ்பிரஸ் சுமார் 493 கிமீ தூரத்தை சுமார் 7 மணி நேரம் 25 நிமிடங்களில் கடக்கிறது, இது சென்னைக்கும் மதுரைக்கும் இடையிலான வேகமான மற்றும் மிகவும் விருப்பமான ரயில்களில் ஒன்றாகும்.
அதே போல, சென்னை எழும்பூரில் துவங்கும் பல்லவன் எக்ஸ்பிரஸ் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை வழியாக காரைக்குடி சந்திப்பை சென்றடைகிறது. பல்லவன் எக்ஸ்பிரஸ் சுமார் 426 கி.மீ தூரத்தை சுமார் 7 மணி நேரம் 10 நிமிடங்களில் கடக்கிறது.
ஒரு முன்பதிவு பெட்டி குறைப்பு
கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கபடவுள்ளதால் இந்த விரைவு ரயில்களில் ஒரு முன்பதிவு இருக்கை வசதி பெட்டி குறைக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த ரயில்களில் 12 முன்பதிவுள்ள இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது இருக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன இருக்கை வசதி பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவற்றுடன் இயக்கப்பட உள்ளது.
மே 11 முதல் வைகை விரைவு ரயிலில் ஒரு பெட்டி இணைப்பு
மதுரை - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வைகை விரைவு ரயில் (வண்டி எண் 12636) மற்றும் சென்னை எழும்பூர் - காரைக்குடி இடையே இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் (வண்டி எண் 12605) ஆகிய இரு ரயில்களில் மே 11ம் தேதி முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பொது இருக்கை வசதி பெட்டி இணைக்கப்பட உள்ளது.
மே 12 முதல் பல்லவன் விரைவு ரயிலில் ஒரு பெட்டி இணைப்பு
அதேபோல காரைக்குடி - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் (வண்டி எண் 12606) மற்றும் சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்படும் வைகை விரைவு ரயில் (வண்டி எண் 12635) ஆகிய இரு ரயில்களில் மே 12 முதல் ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பொது இருக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.
இந்த செய்தியை பயணிகள் வெகுவாக வரவேற்றுள்ளனர். இதைப்பற்றிய உங்களுடைய கருத்து என்ன? இதே போன்று வேறு எந்த ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்தால் நன்றாக இருக்குமென்று கமென்ட் பாக்ஸில் கூறுங்கள்!



Click it and Unblock the Notifications





