உத்தரகாண்ட்டில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரம் மண்ணுக்குள் புதைந்து கொண்டிருக்கிறது என கடந்த சில வாரங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜோஷிமத் நகரத்தில் உள்ள வீடுகளும் சாலைகளும் மண்ணுக்குள் புதைந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த ஆபத்து மெது மெதுவாக மற்ற இமயமலை நகரங்களுக்கும் விரிவடையத் தொடங்கியுள்ளது. இப்போது பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரிஷிகேஷ் நகரத்தில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ளது. மிகவும் பூதாகரமாக மாறியுள்ள இந்த விஷயம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அழகிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் ஆன்மீக தளங்கள் அடங்கிய உத்தரகாண்ட்டின் இந்த நிலை அனைவரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
மண்ணுக்குள் புதைந்து கொண்டிருக்கும் ஜோஷிமத்
உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரம் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடமாகும். ரிஷிகேஷ் மற்றும் பத்ரிநாத் செல்லும் எவரும் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த நகரில் சற்று ஓய்வெடுத்துவிட்டு செல்வது வழக்கம். தவுலிங்கா, அலக்நந்தா ஆகிய இரு நதிகளும் ஜோஷிமத் நகரில் சங்கமித்து செல்கின்றன. இந்த நகரைச் சுற்றி ஏராளமான சுற்றுலாத் தளங்கள் இருப்பதால், ரிஷிகேஷ், பத்ரிநாத் செல்பவர்கள் இங்கு தங்கி செல்கிறார்கள்.
ஜோஷிமத்தில் உள்ள 500 க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்கள் உண்டாகியுள்ளன. சில வீடுகள் இடிந்து பூமியில் தரைமட்டமானதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது இதோடு நிற்கவில்லை. ஜோஷிமத்தை நெருங்கியுள்ள பத்ரிநாத் மற்றும் ரிஷிகேஷ் பகுதிகளிலும் விரிசலும் பிளவும் ஏற்பட ஆரம்பித்துள்ளது.
ரிஷிகேஷின் வீடுகளில் விரிசல்
ரிஷிகேஷில் உள்ள அடாலி கிராமத்தில் உள்ள சுமார் 85 வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பகுகுணா நகர், சிஎம்பி வளைவு மற்றும் ஐடிஐ காலனி போன்ற இடங்களில் விரிசல் ஏற்பட்டு வருகின்றன. இதனால் கர்ணபிரயாகின் தாசில்தாராக உள்ள சுரேந்திர தேவ், அதிகம் பாதிக்கப்பட்ட இடங்கள் என்று சமீபத்தில் பகிர்ந்து கொண்டார். இதே போன்று தெஹ்ரி கர்வால் என்ற மற்றொரு இடத்திலும் இதே போன்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள வீடுகள் மற்றும் நிலங்கள் பல விரிசல்களைப் பதிவு செய்துள்ளன.
சுரங்கப்பாதை காரணமாக இருக்குமோ
ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் ரயில் திட்டத்தின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணிதான் வீடுகள் மற்றும் நிலங்களில் விரிசல் ஏற்படுவதற்கு காரணம் என்று ரிஷிகேஷ் உள்ளூர்வாசிகள் கருதுகின்றனர். 520 மெகாவாட் திறன் கொண்ட தபோவன் விஷ்ணுகர் நீர்மின் திட்டத்திற்காக தேசிய அனல் மின் கழகத்தின் 12 கி.மீ சுரங்கப்பாதையே தங்களின் இந்த நிலைக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் ஜோஷிமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கும் அதன் சுரங்கப்பாதைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று NTPC தெரிவித்துள்ளது.
பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் விரிசல்
ரிஷிகேஷ் மற்றும் ஜோஷிமத்தில் ஏற்பட்டது போல இந்த வார தொடக்கத்தில் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக விரிசல் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் உள்ள சிங்தார் வார்டு மற்றும் பகுகுணா நகரில் உள்ள பல வீடுகளில் விரிசல் தென்படுகிறது. சாமோலி மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்த் கிஷோர் ஜோஷி, நெடுஞ்சாலையின் நிலைக்கு நிலச்சரிவுகளே காரணம் என்று கூறியுள்ளார். விரிசல் மற்றும் சரிவு ஏற்பட்டாலும், போக்குவரத்தில் பெரிய அளவில் மாற்றம் செய்யாததால், மக்கள் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். சார் தாம் யாத்திரை காரணமாக இந்த நெடுஞ்சாலையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
உத்தரகாண்ட் இந்தியாவின் மிக அழகான மலைவாசஸ்தலங்கள் மற்றும் புகழ்பெற்ற பல ஆன்மீக ஸ்தலங்களின் தாயகமாக உள்ளது. இந்த மாநிலத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இதற்கு இப்படி ஒரு நிலையா என்பது கவலை அளிக்கிறது.