சென்னை மாநகரில் பெரும்பாலான மக்களுக்கு தினசரி வாழ்வில் ஒரு அங்கமாக விளங்கும் புறநகர் ரயில் சேவைகளால் தினமும் லட்சக்கணக்கான மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும், பொதுமக்களும் பலனடைகின்றனர். நீண்ட நாட்களாக சென்னை புறநகரில் இயங்கும் ரயில்களில் குளிர்சாதன வசதி பொருத்தப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில், சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே கூடிய விரைவில் ஏசி ரயில்கள் இயக்கப்படவிருக்கின்றன, இந்த சேவை நாளடைவில் செங்கல்பட்டு வரையிலும் நீட்டிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றன!

சென்னை மாநகரின் முதுகெலும்பாக விளங்கும் ரயில் சேவை
சென்னையின் பொதுப் போக்குவரத்து சேவையில் மெட்ரோ ரயில்கள் புறநகர் மின்சார ரயில்கள் மிகப்பெரிய மற்றும் மிக முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இந்த நிலையில் மெட்ரோ ரயில்களில் வழங்கப்படும் பாதுகாப்பு அம்சங்கள், குளிர்சாதன வசதி, நவீன தொழில்நுட்பம் மற்றும் பயண நேரம் உள்ளிட்ட காரணங்களுக்காக நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மெட்ரோ ரயில்களுக்கு இணையாக சென்னையில் புறநகர் ரயில்களிலும் குளிர்சாதன வசதி பொருத்தப்படவிருக்கிறது.

சென்னையின் முதன்முதல் புறநகர் ஏசி ரயில்
இந்த நிலையில் மெட்ரோ ரயில்களை போல புறநகர் ரயில்களையும் முழுக்க முழுக்க ஏசி ரயில்களாக மாற்ற தற்போது ரயில்வே திட்டமிட்டுள்ளது. மிகக் குறைந்த கட்டணம் என்பதால் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு இந்த ரயில் சேவை வர பிரசாதமாக உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த ரயில்கள் விரைவில் ஏசி ரயில்களாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல் கட்டமாக சென்னை கடற்கரை தாம்பரம் இடையே ஏசி மெமு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ஏசி ரயில்
சென்னை மாநகரில் ஏசி வசதி கொண்ட புறநகர் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கைக்கு இணங்க, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே விரைவில் ஏசி ரயில் இயக்க மெமு ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஏசி ரயில் இன்னும் ஒரு மாதத்தில் தொழிற்சாலையில் இருந்து தயாராகிவிடும் என்றும், ஏசி ரயிலை இயக்குவதற்கு சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தை தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டணம் எவ்வளவு தெரியுமா?
தற்போது இயக்கப்பட்டு வரும் சாதாரண புறநகர் மின்சாராயணங்களில் குறைந்தபட்சமாக கட்டணம் ஐந்து ரூபாய் ஆக இருக்கும் நிலையில், ஏசி ரயிலில் பயணம் செய்ய அடிப்படை கட்டணம் 10 கிலோமீட்டர் வரை ரூ.29 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 11 முதல் 15 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு கட்டணம் ரூ.37 ஆகவும், 16 முதல் 25 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு ரூ.56 ஆகவும் கட்டணம் இருக்கும். அதிகபட்சமாக 500 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய ரூ.423 ஆகும் என்றும் கூறப்படுகிறது.
எது எப்படியோ, மெட்ரோ ரயில்களுக்கு போட்டியாக ஏசி புறநகர் மின்சார ரயில்கள் களம் இறக்கப்பட்டாலும், எங்களுக்கு இந்த சாதா ரயில் சேவையே போதும் என்று பெரும்பாலான மக்கள் கூறி வருகின்றனர். இதைப்பற்றிய உங்களுடைய கருத்து என்ன?



Click it and Unblock the Notifications



