இந்தியாவில் மிகவும் முக்கியமான மற்றும் புனிதமான யாத்திரையாகக் கருதப்படுவது இந்த அமர்நாத் யாத்திரையாகும். பனியால் உருவாகிற சிவபெருமானின் இயற்கையான வடிவத்தைக் காண இங்கு பக்தர்கள் ஆண்டு தோறும் வருகை புரிகிறார்கள். எம்பெருமான் சிவனோடு தொடர்புடைய புனித தலங்களில் அமர்நாத் மிகவும் முக்கிய இடம் வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் முக்தி அடைய இந்த யாத்திரை மேற்கொள்கின்றனர். கொரானா தொற்றால் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் இப்புனித யாத்திரை நிறுத்தப்பட்ட பிறகு இந்த ஆண்டு இன்று தொடங்கியது. அமர்நாத் யாத்திரையைப் பற்றிய முழு தகவல்கள் இதோ!
அமர்நாத் யாத்திரை என்றால் என்ன
அமர்நாத் குகை 5௦௦௦ ஆண்டுகள் பழமையானது என்றும் அதை ஒரு மேய்ப்பன் கண்டுபிடித்தாகவும் புராணங்கள் கூறுகின்றன. மேய்ப்பன் குகையின் அருகே ஒரு துறவியை சந்தித்ததாகவும், அவர் கொடுத்த நிலக்கரியை வீட்டிற்கு சென்று பார்த்தவுடன் அது தங்கமாக மாறியதாகவும் நம்பப்படுகிறது. உடனே, துறவியை காண வேண்டி வந்த மேய்ப்பன் அமர்நாத் குகையை கண்டுபிடித்தான் என புராணங்கள் கூறுகின்றன.
அழியாததன் பின்னணியில் உள்ள ரகசியத்தை தெரிந்துக் கொள்ள விரும்பிய பார்வதி தேவி, சிவனிடம் அதைக் கூறும்படி வற்புறுத்தினாள். ரகசியத்தை வேறு யாரும் கேட்கக்கூடாது என்பதற்காக குகையை நோக்கிச் சென்ற சிவபெருமான் அங்கேயே அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருவதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே, மோட்சத்திற்கான தேடலில் பக்தர்கள் ஆண்டுதோறும் இங்கு குவிந்து வருகின்றனர்.
அமர்நாத் யாத்திரையின் பின்னணி
அமர்நாத் யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் அதாவது இந்து நாட்காட்டியில் ஷ்ராவணி மேளாவின் போது மேற்கொள்ளப்படுகிறது. அமர்நாத் குகையை ஆண்டிற்கு இந்த ஒரு சந்தர்ப்பத்தில் மட்டுமே தரிசிக்க முடியும். கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த குகை ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து சுமார் 141 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மிகவும் கடினமான இந்த யாத்திரையை இரண்டு வழிகளில் நாம் மேற்கொள்ளலாம்.
ஒன்று பெஹல்காமில் இருந்தும் மற்றொன்று சோன்மார்க் பால்டலிலிருந்தும் தொடங்குகிறது. பெஹல்காமிலிருந்து செல்லும் பாதை எளிமையானது மற்றும் வசதியானது. ஆனால் சோன்மார்க்கிலிருந்து செல்லும் பாதை குறுகிய தூரம் என்றாலும் மிகவும் கடினமானது. இந்த வழியைப் பின்தொடர்பவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தில் இதைச் செய்கிறார்கள், மேலும் இந்த பாதையில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கு இந்திய அரசு பொறுப்பேற்காது. முதல் வழியில் யாத்திரைக்கு செல்வதே சாலச் சிறந்தது.
பெஹல்காமில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள சந்தன்பாடி, லிடர் ஆற்றின் வழியே பிஸ்ஸூ காடு, சேஷ்நாக்கை சென்றைடைகிறார்கள். அடுத்ததாக ஐந்து சிறிய ஆறுகள் ஓடும் பஞ்சதர்னியை அடைய வேண்டும். புனித குகை இங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வழி முழுவதும் பனிக்கட்டியால் நிரம்பியுள்ளது. இந்த பாதை மிகவும் கடினமானது என்றாலும் புனித குகையை அடைந்தவுடனே ஒருவர் கடந்து வந்த சோர்வு அனைத்தையும் மறந்து, இயற்கையான பனியால் ஆன சிவலிங்கத்தை தரிசனம் செய்து ஆன்மீக ஆனந்தத்தை அடைகிறார் என்றால் அது மிகையாகாது.
அமர்நாத் யாத்திரை 2022
தொடர்ந்து 45 நாட்கள் அனுமதிக்கப்படும் இந்த அமர்நாத் யாத்திரை ஜூன் 30 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரைக்கான பதிவு முறைகளை நிறைவு செய்து உரிய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டியது கட்டாயமாகும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் அமர்நாத் யாத்திரைக்கு விண்ணபிக்கலாம். ஒரு நாளைக்கு 10000 நபர்கள் வரை அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் முதலில் முன்பதிவு செய்பவருக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
அமர்நாத் ஆலய வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து படிவத்தைப் பதிவிறக்கம் செய்து தேவைப்படும் விவரங்களான போட்டோ, ஆதார் கார்டு, மெடிக்கல் சர்டிஃபிகேட் ஆகியவற்றைக் கொடுத்து விண்ணப்பிக்கலாம். ஒரு யாத்ரீகருக்கான கட்டணம் ரூ. 150 ஆகும். ஆஃப்லைன் பதிவுக்கு, தேவையான ஆவணங்களுடன் நியமிக்கப்பட்ட வங்கிகளுக்குச் செல்ல வேண்டும். ஒரு மொபைல் எண்ணில், 4 பேர் மட்டுமே யாத்ராவில் பதிவு செய்ய முடியும். ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு, கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் அல்லது நெட் பேங்கிங் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
மேலும் 13 வயதிற்கு குறைந்தவரும் 75 வயதிற்கு அதிகமானவர்களும், கர்ப்பிணி பெண்களும் யாத்திரைக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. உடல் தகுதி கொண்டவர்களும், மனதில் ஈசனைக் காண வேண்டும் என்று ஏங்குவோரும் தாராளமாக விண்ணப்பித்து ஆனந்தமாக யாத்திரைக்கு சென்று வரலாம்!