சென்னைக்கு மெட்ரோ வந்த பிறகு, சென்னையின் போக்குவரத்து நெரிசல் குறைந்து, மக்களும் மேம்பட்ட மற்றும் வசதியான பயணத்தை அனுபவிக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். சென்னையின் இணைப்பை மேலும் மேம்படுத்துவதற்காக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயிலை நீட்டிப்பதற்காக திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை (DPR) மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இது மட்டுமின்றி, புதிதாக சென்னையில் 13 மெட்ரோ நிலையங்களும் உருவாக்கப்படவுள்ளன!
மெட்ரோ மற்றும் புறநகர் சேவையின்றி தவிக்கும் பயணிகள்
தென் மாவட்ட பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில், சென்னையின் 3 ஆவது மற்றும் சென்னையிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாக உருவாக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்னமும் பயணிகள் அணுகுவதற்கு சிக்கலாகவே இருக்கிறது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சென்னையின் எந்தப் பகுதியில் இருந்தும் கிளாம்பாக்கத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், நேரடி மெட்ரோ மற்றும் ரயில் சேவை இல்லாதது இணைப்பை சற்று சிரமமாக்கியுள்ளது.

நீண்ட கால கோரிக்கை நிறைவேறப்போகிறது
இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் சேவை இணைப்பு செய்யப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் அறிக்கை தமிழ்நாட்டு அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் வரை சுமார் 9,445 கோடி ரூபாயில், செயல்படுத்தப்பட உள்ளது.
பணிகள் விரைவில் துவங்கும்
இந்த வழித்தடத்தில் 13 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில், சாலை மேம்பாலத்துடன் இணைக்கும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த அறிக்கை தலைமைச் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
கிளாம்பாக்கம் to செங்கல்பட்டு உயர்மட்ட சாலை
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 15 மீட்டர் உயரத்தில் தேசிய நெடுஞ்சாலை காண மேம்பால சாலை அமைய உள்ளது. 18 முதல் 20 மீட்டர் உயரத்தில் மெட்ரோ ரயில் மேம்பால பாதை அமைய உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தடையின்றி செல்ல, வெளிவட்ட சாலையுடன் இணைக்க தாம்பரம் அருகே சாய்வு பாதைகள் அமைக்கப்பட உள்ளது. இந்த மேம்பால சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வந்து அங்கிருந்து, செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட உள்ளது.

புதிதாக 13 மெட்ரோ நிலையங்கள்
கிளாம்பக்கத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வரை 13 மெட்ரோ நிறுத்தங்கள் அமைய உள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், வண்டலூர் உயிரியல் பூங்கா, வண்டலூர் ரயில் நிலையம், பீர்க்கங்கரணை, இரும்புலியூர், தாம்பரம், திருவிக நகர், மகாலட்சுமி நகர், குரோம்பேட்டை, கோதண்டம் நகர், பல்லாவரம் மற்றும் சென்னை விமான நிலையம் ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகின்றன.
தாம்பரம் மற்றும் முடிச்சூர் சாலை வரை நீட்டிப்பு
சாத்தியக்கூறு ஆய்வின் போது, CMRL மூன்று சாத்தியமான சீரமைப்புகளை மதிப்பீடு செய்தது. இவற்றில் GST சாலையில் 16 கி.மீ நீளம்; GST சாலையில் இருந்து தாம்பரம் மற்றும் முடிச்சூர் சாலை வரை நீட்டிக்கப்படும் 19 கி.மீ பாதை; விமான நிலையம்-கண்டோன்மென்ட்-பல்லாவரம் பேருந்து நிலையம் வழியாக செல்லும் 20 கி.மீ பாதை, ஹஸ்தினாபுரம் மற்றும் தாம்பரம் மேற்கு வழியாக GST சாலை மற்றும் கிளாம்பாக்கம் வரை செல்லும் முடிச்சூர் சாலை ஆகியவை அடங்கும்.
இந்த சீரமைப்பு கிளாம்பாக்கம் பேருந்து முனையம், சென்னை சர்வதேச விமான நிலையம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையம் போன்ற முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு இடையேயான இணைப்பை கணிசமாக மேம்படுத்தும், இதனால் பயணிகளுக்கு மிகவும் திறமையான போக்குவரத்து விருப்பம் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications



