சென்னை-திருச்சி வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, தாம்பரத்தில் இருந்து 17 கிமீ தொலைவில் உள்ள சிங்கபெருமாள் கோயிலில் இருந்து கிரீன்ஃபீல்டு விரைவுச் சாலை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) முடிவு செய்துள்ளது. இந்த முன்மொழியப்பட்ட நெடுஞ்சாலை, ஜிஎஸ்டி சாலையில் கட்டப்பட்டு வரும் சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டில் (CPRR) தொடங்கி திருச்சி வரை செல்கிறது. இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகு சென்னையிலிருந்து திருச்சி செல்லும் உங்கள் பயணமானது 4 மணி நேரமாக குறையும்!
புதிய சாலை திட்டங்களை அமைக்க NHAI முடிவு
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) நாடு முழுவதும் 6,747 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய சாலை திட்டங்களுக்கான விரிவான சாலை வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இந்த திட்டங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள், புறவழிச்சாலைகள் மற்றும் பொருளாதார நெடுஞ்சாலைகளை உள்ளடக்கியது, நாட்டின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வளர்ச்சியின் இரண்டாம் கட்டத்தின் போது இரண்டு முக்கிய முயற்சிகளால் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வகையில் பயனடைகிறது.
தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து சென்னைக்கு ஈஸி அணுகல்
6 வழி சாலையாக அமைக்கப்பட உள்ள இந்த நெடுஞ்சாலை, ஜிஎஸ்டி சாலையில் கட்டப்பட்டு வரும் சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டில் (CPRR) தொடங்கி திருச்சி வரை செல்லும். அதோடு மட்டுமல்லாமல் இது சென்னை துறைமுகங்களையும் இணைக்கும். இந்த சாலை செயல்பாட்டுக்கு வந்ததும், தூத்துக்குடி, மதுரை மற்றும் பிற தென் மாவட்டங்களில் இருந்து வணிகப் பொருட்கள் சென்னை நகருக்குள் நுழையாமல் சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு வழியாக எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்
ஜிஎஸ்டி சாலையில் அதிகரித்து வரும் வாகன நெரிசல், எதிர்கால வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் வணிக மற்றும் பிற பொருட்களின் போக்குவரத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு புதிய விரைவுச் சாலை திட்டமிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, தினமும் சுமார் 1.6 லட்சம் வாகனங்கள் ஜிஎஸ்டி சாலை வழியாக செல்கின்றன. இதனால் ஒரு 6 வழிப்பாதை அமைப்பது என்பது இந்த பாரிய போகுவரத்து சாலையில் நெரிசலை குறைக்க உதவும்.
சென்னை to திருச்சி வெறும் 4 மணி நேரம் தான்
இனி சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு மக்கள் மிகவும் விரைவாகவும், வசதியாகவும் செல்லலாம். தற்போதுள்ள 6 மணி நேரப் பயணத்திற்குப் பதிலாக மக்கள் இந்த இரண்டு முக்கிய நகரங்களுக்கு இடையே வெறும் 4 மணி நேரத்தில் பயணிக்க முடியும். இந்த இரு நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்தை திறமையாக கையாளவும் நேரத்தை குறைக்கவும் 310 கிமீ நீளமுள்ள சென்னை to திருச்சி விரைவுச்சாலை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) முடிவு செய்துள்ளது.

விரைவில் தமிழகத்தில் புதிய எக்ஸ்பிரஸ்வே
உச்ச விடுமுறை மற்றும் சுற்றுலா சீசனில் இந்த இரண்டு நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து அதிகம் காணப்படுகிறது. இரு நகரங்களுக்கு இடையே ஒரு விரைவுச்சாலை அமைத்தால் பொதுமக்கள் எந்த சிரமுமின்றி விரைவாக பயணம் செய்யலாம் என NHAI முடிவு செய்து இந்த திட்டத்தினை முன்மொழிந்துள்ளது. இந்த திட்டத்திற்கு கிரீன் சிக்னல் பெற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) பரிசீலித்து வருகின்றனர்.
கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வரும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே
சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையை எக்ஸ்பிரஸ்வேயாக மாற்றுவது என்பது குறிப்பிடத்தக்க திட்டமாகும். முதற்கட்டமாக மதுரவாயலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரையிலான 23 கிலோமீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கும் பணி 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் தொடங்கும். 3,500 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் 2024-2025 நிதியாண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிவேக நெடுஞ்சாலை ஆறு வழித்தடங்களைக் கொண்டிருக்கும், மேலும் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களுக்கு கூடுதல் பாலங்கள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications




