44வது செஸ் ஒலிம்பியாவின் தொடக்க விழா நேற்று (ஜூலை 28 ஆம் தேதி) மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக துவங்கப்பட்டது. இந்தியாவில் அதிக கிராண்ட் மாஸ்டர்களை கொண்ட மாநிலமாக தமிழகம் இருப்பதால், இந்த போட்டியை நடத்தும் உரிமையை தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் குரலில் ஒலித்த தமிழக வரலாறு, அரங்கிற்கு உள்ளேயும் வெளியேயும் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. அந்த வரலாற்றிற்கு ஏற்றார்போல் நூற்றுக்கணக்கான கலைஞர்கள், தங்கள் நடனங்கள் மற்றும் நடிப்புகளால் சேரர், சோழர்கள், பாண்டியர்கள் ஆகிய மூன்று பண்டைய சாம்ராஜ்யங்களின் சாதனைகளை உயிர்ப்பித்தனர்.
உலகின் மிகப்பெரிய டீம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் பிரமாண்ட தொடக்க விழாவை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று செஸ் ஜோதியை கொடுத்து துவங்கி வைத்தார். பல அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பெரும்பாலனோர் இதில் கலந்துக் கொண்டனர்.
மூன்று மணி நேரம் நடைப்பெற்ற இந்நிகழ்வில் பரதநாட்டியம், கதக், ஒடிசி, கதகளி, குச்சிப்புடி, மணிப்புரி போன்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும், பல பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளும் சிறப்பாக அரங்கேறின. பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறுகிய காலத்தில் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ததாகக் கூறினார்.
இது இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரு பெருமையான தருணம் என குறிப்பிட்டார். இதில் 189 நாடுகளில் இருந்து சுமார் 2,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்குபெறுகின்றனர். இந்தியாவின் சார்பில் 30 பேர் 6 குழுக்களாக விளையாடவுள்ளனர்.
இன்று தொடங்கும் போட்டிகள் ஆகஸ்ட் 10 வரை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் மகாபலிபுரம் ரிசார்ட் மற்றும் கன்வென்ஷன் சென்ட்ரல் ஃபோர் பாயிண்ட்ஸில் நடைபெற உள்ளது. இந்தியாவில் உள்ள ஆர்வமுள்ள செஸ் ரசிகர்கள் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ டிக்கெட் போர்ட்டலில் பதிவு செய்யலாம். இதன் டிக்கெட்டுகள் வகை 1, வகை 2, வகை 3 என்று பிரிக்கப்பட்டுள்ளன.
முதல் வகையில் பெறும் டிக்கெட்டுகளின் விலை 200 ரூபாய் ஆகும். இந்த டிக்கெட்டுகளை 19 வயதிற்கும் குறைவான மாணவர்கள், பெண்கள் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் பெறலாம். இந்த டிக்கெட் மூலம் ஹால் 1 மற்றும் ஹால் 2 ஐ அணுகலாம். இந்த டிக்கெட் இரண்டு மணி நேரமே செல்லுபடியாகும்.
வகை 2 இல், இந்தியக் குடிமக்களுக்கான டிக்கெட் கொடுக்கப்படுகிறது. இதன் விலை 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை வேறுபடுகிறது. இந்த டிக்கெட் ஒரு நாள் முழுக்க செல்லுபடியாகும். வகை 3 இல் வெளிநாட்டவருக்கான டிக்கெட் விற்கப்படுகிறது. இதன் விலை 6,000 ரூபாய் 8,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
ஹால் 1க்கான விலைகள் ஹால் 2 ஐ விட அதிகமாக உள்ளது, ஏனெனில் ஹால் 1 முதல் தரவரிசை அணிகள் சம்பந்தப்பட்ட போட்டிகளைக் கொண்டிருக்கும். ஹால் 1ல் திறந்த நிலையில் 28 பலகைகளும், பெண்கள் பிரிவில் 21 பலகைகளும் இடம்பெறும். அதே நேரத்தில், மீதமுள்ள பலகைகள் ஹால் 2 இல் உள்ளன.