உலகம் வளர வளர, எல்லாவற்றிலும் மேம்பட்டு முன்னேற்றம் கண்டாலும் புவி வெப்பமடைதல், காற்று மற்றும் நீர் மாசுபடுதல், அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம், ஓசோன் பெரிதாகுதல், கடல் நீர் மட்டம் உயர்வது என நாளுக்கு நாள் உயரும் அபாயங்களை நாம் எதிர் கொண்டு தான் இருக்கிறோம்!
நாமே அதனை சரி செய்வதை தாண்டி இதற்கு வேறு தீர்வு இல்லை! அதற்கு ஏற்றார்போல தான் உலகிலேயே முழுவதும் சூரிய ஒளி சக்தியால் இயங்கும் முதல் விமான நிலையம் இந்தியாவில் நிறுவப்பட்டு இருக்கிறது. கேரளாவின் கொச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையம் உலகின் முதல் விமான நிலையமாக சூரிய சக்தியில் முழுமையாக இயங்குகிறது என்பதை நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டோம்!
சரக்கு வளாகத்திற்கு அருகில் 45 ஏக்கரில் அமைக்கப்பட்ட 46,150 சோலார் பேனல்களை உள்ளடக்கிய 12 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையத்தின் உற்பத்தியை முதல்வர் திரு.உம்மன் சாண்டி 2015 ஆகஸ்ட் 18 அன்று தொடங்கி வைத்தார். இப்போது, கொச்சி விமான நிலையத்தின் சூரிய மின் நிலையம் அதன் அனைத்து செயல்பாடுகளுக்கும் தேவையான ஒரு நாளைக்கு 50,000 முதல் 60,000 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இது இந்தியாவிற்கே பெருமையான தருணம் தானே!
கொச்சின் சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாக இயக்குனர் திரு.V.J. குரியன் IAS ஒரு நேர்காணலின் போது, "விமான நிலையம் இயங்க அதிகப்படியான மின்சாரம் தேவைப்படுகிறது என்பதை நாங்கள் உணர்ந்ததும், அதற்கான சாத்தியக்கூறுகளை என்ன இருக்கிறது என்று சிந்தித்தோம். பசுமை சக்தியைத் தட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஒரு நாளைக்கு சுமார் 48,000 யூனிட்களை பயன்படுத்துகிறோம். எனவே, நாம் எப்போதும் பின்பற்றும் பசுமை மற்றும் நிலையான வளர்ச்சி மாதிரியை கண்டிப்பாக கடைபிடிப்பதன் மூலம் அதையே உற்பத்தி செய்ய முடிந்தால், அது உலகிற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என எண்ணினோம். தற்போது, சூரிய சக்தியில் முழுமையாக செயல்படும் உலகின் முதல் விமான நிலையம் இதுவாகும்." என்று கூறினார்!
ஒரு விமான நிலையம் இயங்குவதற்கு எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்! ஒரு சர்வதேச விமான நிலையமே சூரிய ஒளியால் இயங்கும் போது, நாம் ஏன் நமது வீடுகளிலும் அலுவலகங்களிலும் சூரிய ஒளி சக்திக்கு மாறக் கூடாது என்று யோசித்து பாருங்களேன்!