புதுச்சேரி மிக பிரபலமான சுற்றுலாத் தலமாக விடுமுறை நாட்களிலும், நீண்ட வார இறுதிகளிலும் மக்கள் கூட்டத்தினால் நிரம்பி வழிகிறது. வண்ணமயமான கடற்கரைகள், அரவிந்தர் ஆசிரமம், அழகிய ஆரோவில், துடிப்பான கஃபேக்கள், இரவு பார்ட்டிகள் என புதுச்சேரி நகரம் சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமான இடமாக இருக்கிறது. ஆனால் இவையெல்லாத்தையும் விட முக்கியமான விஷயம் என்னவென்றால் திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் பைபாஸ் சாலையில் அதிகப்படியான திருட்டுகள் நடைபெறுவதாக அவ்வழியே பயணிக்கும் மக்கள் தெரிவித்து வருகின்றனர்!
திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் என்ன நடக்கிறது?
புதுச்சேரியில் இருந்து சென்னையை இரண்டு வழிகளில் அணுகலாம். காலாப்பட்டு, மரக்காணம், மகாபலிபுரம், திருவான்மியூர் வழியே செல்லும் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியே செல்லும் பைபாஸ் சாலை. இவற்றில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் திண்டிவனம் சாலையை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால், திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் அவ்வப்போது அதிகப்படியான குற்ற சம்பவங்கள் அரங்கேறுவதாக தெரிகிறது.

மக்கள் அதிகம் பயன்படுத்தும் திண்டிவனம்-புதுச்சேரி சாலை
புதுச்சேரி நுழைவாயிலில் இந்தியாவின் பிரபலமான ஜிப்மர் மருத்துவமனை உள்ளது, இந்த மருத்துவமனைக்கு திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் இருந்து நோயாளிகள் வருகின்றனர். அதில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இந்த சாலையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இந்த சாலையில் தான் இப்பொழுது திட்டமிட்டு இரவு நேரங்களில் குறிப்பாக விடியற்காலை நேரத்தில் வாகனங்களை மறித்து கொள்ளையடிப்பதாக நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் தங்களது அனுபவங்களை, சக வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை பதிவாக சமூக ஊடங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
கொள்ளையடிக்க முயற்சி செய்யும் திருடர்கள்
நீங்கள் நள்ளிரவு முதல் அதிகாலை வரை திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் செல்லும் போது சற்று கவனத்துடன் செல்ல வேண்டும் என்றும், குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்ல வேண்டாம் என்றும் சமூக வலைத்தளங்களில் பல பதிவுகள் வைரலாகி வருகின்றன. ஆம், இரவு நேரங்களில் ஒருவர் அந்த வழியே செல்லும் கார்களை நிறுத்த முயற்சி செய்வதாகவும், காரை நிறுத்தினால் கும்பலாக சிலர் எழுந்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர். பலரும் பயந்து கொண்டே காரை நிறுத்தாமல் சென்று விடுகின்றனர்.

கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்
காரில் சென்றாலே பயமாக இருக்கிறது, நீங்கள் அந்நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் சென்றால் அவ்வளவு தான் பெரும் விபத்து ஏற்பட கூட வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர். இப்படி தொடர் சம்பவங்கள் நடைபெற்றாலும் கூட பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தாமல் செல்வதால் குற்றங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை. குற்றம் நடைபெறவில்லை என்பதற்காக கவனக்குறைவாக இருக்க வேண்டாம், அந்த சாலையில் ரோந்து வண்டிகளை அனுப்புமாறும், காவல் பூத்துகளை அமைக்குமாறும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும், அவசரத் தொடர்புக்கு சுங்கச்சாவடியைத் தொடர்புகொள்ளும் வசதியை உருவாக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
இதைப் பற்றிய உங்களுடைய கருத்து என்ன?



Click it and Unblock the Notifications





