புதுச்சேரி காமராஜர் சாலையில் அமைந்துள்ள பாலாஜி தியேட்டர் அருகே உள்ள வாய்க்காலில் நவம்பர் 20 ஆம் தேதி ஒரு 4 அடி முதலை தென்பட்டது. அதனை கண்ட பொதுமக்கள் ஆச்சர்யத்தில் ஒன்று கூடி முதலையை போட்டோவும் வீடியோவும் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். பொதுமக்களின் சத்தத்தை கேட்ட முதலை அங்கிருந்து மாயமாய் மறைந்தது. வாய்க்கால் அருகே உள்ளது அனைத்துமே குடியிருப்பு பகுதிகள் என்பதால் உடனே வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது!
புதுச்சேரி நகரின் மையத்தில் தென்பட்ட முதலை
புதுச்சேரி கருவடிக்குப்பம், லாஸ்பேட்டை பகுதியில் இருந்து வரும் சிறிய வாய்க்கால்கள் ஜீவா நகரில் இருந்து உப்பளம் வழியாக கழிவு நீர், உப்பனாறு வாய்க்கால் வழியாக கடலில் கலக்கிறது. நவம்பர் 20 ஆம் தேதி புதுச்சேரி காமராஜர் பாலாஜி தியேட்டர் அருகே அமைந்துள்ள உப்பனாறு வாய்க்காலில் சுமார் 4 அடி நீளமுள்ள ஒரு முதலை தென்பட்டது.

ஒன்று திரண்ட பொதுமக்கள்
பாலாஜி தியேட்டர் அருகே முதலில் முதலையை பார்த்த கடை ஊழியர்கள் அக்கம் பக்கத்தில் உள்ள நண்பர்களிடம் தெரிவித்தனர். உடனே அங்கு கூட்டம் கூட, பொதுமக்கள் பலரும் முதலையை பார்க்க ஆவலாக ஒன்று திரண்டனர். முதலை இருக்கும் செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவ, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாயமாய் மறைந்த முதலை
சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து வந்தனர். ஆனால் அதற்கு முன்னரே திரளாக குவிந்திருந்த பொதுமக்கள் ஏற்படுத்திய இரைச்சலால் சற்று நேரத்திற்குள் முதலை மாயமாய் மறைந்தது. முதலையை பிடிக்க வாய்க்காலில் இறங்கிய வனத்துறையினர், முதலை இல்லாததை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர். இதனால் பாலாஜி தியேட்டர் அருகே அரை மணி நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விரைந்து வந்த வனத்துறை
பின்னர், போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி MLA ஜான்குமார் அருகே குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் விரைந்து முதலையை பிடிக்குமாறு வலியுறுத்தினார். இதனிடையே அங்கு இருந்த வனத்துறை பாதுகாவலர், வஞ்சுளவல்லிமுதலையை பிடிப்பதற்காக முதலில் ஊழியர்களிடம் ஆற்றின் ஆழத்தை கணக்கிட உத்தரவிட்டார்.
பொறி வைத்து பிடித்த திட்டம்
வாய்க்கால் 5 அடி ஆழம் இருந்ததால், முதலில் நீரோட்டத்தை நிறுத்தி முதலையை பிடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. புதுச்சேரி முழுவதும் 12 மணி நேரத்திற்கு முதலையை பற்றியே பேச்சாக இருந்தது. இதனிடையே நேற்று இரவு 8 மணிக்கு முதலையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கினர். அவர்களது அலுவலகத்தில் கோழிக்கறியினை வைத்து கூண்டு ஒன்றினை தயார்படுத்தி மக்கள் கூட்டம் குறைந்து வாகன இரைச்சல் குறைந்த பிறகு முதலை தென்பட்ட அதே இடத்தில் கூண்டை இறக்கி வைத்தனர்.
16 மணி நேர போராட்டத்திற்கு பிறகு முதலை கண்டுபிடிப்பு
இதனை சாப்பிட வரும் போது முதலை சிக்கும் என நம்பி காத்திருந்தனர். நள்ளிரவு 1.30 மணிக்கு முதலை கோழிக்கறியை சாப்பிட வெளியே வந்த போது கூண்டுக்குள் சிக்கியது. இதனையடுத்து 16 மணி நேர போராட்டத்திற்கு பிறகு முதலையை மீட்டு வனத்துறைக்கு கொண்டு சென்றனர்.
அதிகாலை 2 மணியளவில் பிடிப்பட்ட முதலை
பிடிபட்ட முதலைக்குட்டியை கூண்டோடு வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். வாய்க்கால் சகதி இருந்ததால் முதலையை சுத்தப்படுத்தி, வாயைகட்டிவிட்டு அதன் நீளம், அகலம், உடல் எடை ஆகியவற்றை சோதித்தனர். உப்பனாறு கால்வாயில் அதிகாலை 2 மணியளவில் முதலையை ஊழியர்கள் பொறி வைத்து பிடித்தனர். முதலை உடல்நிலை நன்றாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்கே இருந்து வந்த முதலை இது?
இது எங்கிருந்து வந்தது என்ற விசாரணை தொடங்கியுள்ளது. சட்டவிரோதமாக வன விலங்குகளை வளர்த்திருந்தால் அது தண்டனைக்குரிய குற்றம். இந்த முதலைகுட்டி ஒரு வயதுக்குள்தான் இருக்கும். முதலை 1.35 கிலோ எடையுடன் 2.3 அடி நீளம் கொண்டிருந்தது. இந்த முதலையை 3 மாதம் முன்பு கூட விட்டிருக்கலாம். பாலத்தின் அடியில் பாதுகாப்பாக வாழ பழகியிருக்கலாம். இது எப்போது விடப்பட்டது என்பதை கணிக்க முடியவில்லை. இருப்பினும் வனத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இது தவிர வேறு முதலை உள்ளதா என ஆங்காங்கே பொறி வைத்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். இந்த முதலை இடம் பெயர்ந்து வந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இது எங்கிருந்து வந்தது என்பதுதான் கேள்வி.



Click it and Unblock the Notifications





