மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான எல்லோரா குகைகள் ஹைட்ராலிக் லிஃப்ட் வசதி கொண்ட நாட்டின் முதல் நினைவுச்சின்னமாக மாறும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் மூத்த அதிகாரி ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்திருக்கிறார்.
இந்திய பாரம்பரிய தளத்தில் ஹைட்ராலிக் லிப்ட் நிறுவப்படுவது இதுவே முதல் முறையாகும்.
உலக பாரம்பரிய தளமான எல்லோரா குகைகள்
ஔரங்காபாத் நகரத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள எல்லோரா, உலகின் மிகப்பெரிய பாறைகளால் ஆன கோயில் வளாகங்களில் ஒன்றாகும். இது இந்து, பௌத்த மற்றும் ஜெயின் சிற்பங்களைக் கொண்டு இது இப்பகுதியின் மிக அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் காணும் மிக முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்கிறது.
இந்த வளாகத்தில் உள்ள 34 குகைகளில், குகை எண் 16, கைலாஷ் குகை என்று பிரபலமாக அறியப்படுகிறது, இது ஒரு இரட்டை மாடி அமைப்பாகும், மேலும் சுற்றுலாப் பயணிகள் படிக்கட்டுகளில் ஏறி, மேலிருந்து அழகிய அதன் சுற்றுவட்டார ஏழிலைக் ரசிக்க வளைவில் செல்ல வேண்டியதாக இருக்கிறது. இந்தப் பகுதியில் ஏற்கனவே ஒரு மென்மையான மேற்பரப்பு உள்ளது. இந்த இடத்தில் இருபுறமும் சிறிய லிஃப்ட்களை அமைத்தால் பார்வையாளர்கள் குகைகளின் இரண்டாவது தளத்தை அடைவதற்கு இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லோரா குகைகளில் லிஃப்ட் வசதி
எல்லோரா குகைகள் தினந்தோறும் சர்வதேச பயணிகள் உட்பட சுமார் 2,000 முதல் 3,000 சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் காண்கிறது. பார்வையாளர்கள் கட்டிடக்கலையை சிறப்பாகப் பார்த்து ரசிப்பதற்காகவும், நடைபாதையில் அடைய கடினமாக இருக்கும் தளங்களை அடைய உதவும் வகையிலும், படிக்கட்டுகளில் ஏற முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கும் வயதானவர்களுக்கும் ஒரு சிறந்த அணுகலை வழங்கும் வகையிலும் லிப்ட் வசதி செய்ய இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை முடிவு செய்துள்ளது.
லிப்ஃட் மூலம் மலைகளால் சூழப்பட்ட ஒற்றைக் கட்டிடமான கைலாஷ் குகையையும் சுற்றுலாப் பயணிகள் உச்சியில் இருந்து பார்த்து ரசிக்க முடியும். இந்த திட்டத்தினால், ஹைட்ராலிக் லிப்ட் வசதி கொண்ட தொல்பொருள் ஆய்வுத் துறையின் கீழ் நாட்டில் உள்ள முதல் உலக பாரம்பரிய தளமாக எல்லோரா உருவாகும். இதற்கான ஒப்புதல் சென்ற மாதமே கிடைத்து விட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் சில வசதிகள்
லிப்ட் வசதியோடு வெளிச்சம் தேவைப்படும் இடங்களில் விளக்குகள் நிறுவுதல், பயணிகளின் வசதிக்காக டிக்கெட் கவுன்டர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், புகைப்படம் எடுத்து மகிழ செல்ஃபி பாயின்ட்களை உருவாக்குதல், மேம்பட்ட சுகாதார வசதிகளுடன் கூடிய கழிப்பறைத் தொகுதிகள் கட்டுதல் போன்றவற்றை அமைக்கவும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை முடிவு செய்துள்ளது.
இது தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு எல்லோராவை மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்றுவதோடு மட்டுமில்லாமல் எளிதில் அணுகக்கூடிய சுற்றுலாத்தலமாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.