செர்ரி ப்ளாசம் பூக்களை நீங்கள் நேரில் கண்டது உண்டா? நம்மில் பெரும்பாலானவர்கள் நிச்சயம் கண்டிருக்க மாட்டோம்! ஏனென்றால் அந்த செர்ரி ப்ளாசம் ஜப்பானில் மட்டும் தான் பூக்கும் என்று சொல்வார்கள். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை - ஆம்! அந்த பூக்கள் ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, அமெரிக்கா மட்டுமின்றி இந்தியாவிலும் மேகாலயா மாநிலத்தில் இருக்கிறது. இங்கு பூக்கள் இருப்பது மட்டுமல்லாமல் ஜப்பானில் நடப்பது போலவே செர்ரி ப்ளாசம் திருவிழாவும் நடைபெறுகிறது! இதனைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை நீங்களே பாருங்களேன்!
மேகாலயாவில் நடைபெறும் செர்ரி ப்ளாசம் திருவிழா
வடகிழக்கே இருக்கும் ஏழு சகோதர மாநிலங்களில் இமயமலை, பசுமையான பள்ளத்தாக்குகள், ஆறுகள், நீர்வீழ்ச்சிகள், சமவெளிகளால் சூழப்பட்ட அழகிய மாநிலம் தான் மேகாலயா! மேகாலயாவை இயற்கை அன்னை மிகுதியாக ஆசீர்வதித்து இருக்கிறாள் என்று தான் சொல்ல வேண்டும். எங்கு பார்த்தாலும் பசுமை மட்டுமே நம் கண்ணுக்கு தெரிகிறது. இந்த அழகிய மாநிலத்தில் செர்ரி ப்ளாசம் செடிகளும் இருக்கின்றன. வசந்த காலத்தில் பூக்கும் செர்ரி ப்ளாசம் பூக்கள் ஒருவித இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிற மலர்களால் அந்த இடத்தையே சோலை போல் மாற்றுகின்றன.
ஆண்டுதோறும் ஜப்பானுக்கு படையெடுக்கும் மக்கள்
மக்களே குழம்ப வேண்டாம்! செர்ரி பழங்களுக்கும் செர்ரி ப்ளாசம் பூக்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. லட்சக்கணக்கான மக்கள் செர்ரி ப்ளாசம் திருவிழாவைக் காண ஜப்பானுக்கு செல்கின்றனர். இந்த திருவிழா ஜப்பானில் 7 ஆம் நூற்றாண்டில் இருந்து நடைபெறுகிறதாம். ஒவ்வொரு ஆண்டும், செர்ரி ப்ளாசம் பூக்கள் பூத்துக் குலுங்கும் போது ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானில் இந்த திருவிழா நடைபெறுவது வழக்கம்.
பலரும் பார்க்க விரும்பும் திருவிழா
செர்ரி ப்ளாசம் பூக்கள் பூப்பதை பார்க்க வேண்டும் என்பது பலரின் பக்கெட் லிஸ்டில் இருக்கும் ஒரு விஷயமாகும். பூத்துக் குலுங்கும் பூக்களுக்கு மத்தியில் மக்கள் ஒன்று கூடி இசை, உணவு, நடனம், பாடல், கச்சேரி என இடமே ஆரவாரமாக இருக்கும். ஆனால் இதைக் காண பாஸ்போர்ட் விசா செலவு செய்து ஜப்பான் தான் செல்ல வேண்டும் என்று அர்த்தம் இல்லை. நீங்கள் நம் மேகாலயாவிற்கு சென்றால் போதும்.
ஆர்வத்துடன் காத்திருக்கும் மக்கள்
கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நிகழ்வும் திருவிழாவும் நிறுத்தப்பட்டது. இப்போது உலகம் முன்பு போல் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், வருடாந்திர ஷில்லாங் செர்ரி ப்ளாசம் திருவிழா 2022 பிரமாண்டமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கடந்த 2 ஆண்டுகளாக இந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தனர் என்று தான் சொல்ல வேண்டும்.
செர்ரி ப்ளாசம் திருவிழாப் பற்றிய தகவல்கள்
எப்போது: நவம்பர் 23ஆம் தேதி தொடங்கி 4 நாட்கள் திருவிழாவாக நவம்பர் 26 வரை நடைபெறுகிறது.
திருவிழா நடைபெறும் இடம்: போலோ மைதானம்.
டிக்கெட்டு விலை: ஒரு நபருக்கான கட்டணம் மற்றும் ரூ. 899 மற்றும் VIPக்கான கட்டணம் ரூ. 5000 ரூபாய் ஆகும்.
என்ன ஸ்பெஷல்: பாபோன், நிகில் சின்னப்பா, ஜோனாஸ் ப்ளூ, லூ மஜா, க்ரூவி இசை மற்றும் பல இசை கலைஞர்களின் கச்சேரி நடைபெறும். உள்ளூர் மக்களுடன் பழகுவதற்கும் ஷில்லாங்கின் அழகிய கலாச்சாரத்தை ஆராய்வதற்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் இந்த திருவிழாவில் ஏராளமான உணவுக் கடைகள், போட்டிகள், பேஷன் ஷோக்கள் ஆகியவையும் காணப்படும்.
செர்ரி பூக்களின் அழகை நீங்கள் இதற்கு முன் பார்த்திருக்கவில்லை என்றால், ஷில்லாங்கிற்கு இப்போதே உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்!