Search
  • Follow NativePlanet
Share
» »பிரசித்திப் பெற்ற காரைக்கால் மாங்கனி திருவிழா 2022 –  வரலாறு, தேதி, நேரம் மற்றும் மற்ற விவரங்கள்!

பிரசித்திப் பெற்ற காரைக்கால் மாங்கனி திருவிழா 2022 –  வரலாறு, தேதி, நேரம் மற்றும் மற்ற விவரங்கள்!

காரைக்காலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காரைக்கால் அம்மையார் மாம்பழத் திருவிழா நாளை வெகு விமர்சியாக தொடங்கவுள்ளது. 63 நாயன்மார்களில் ஒரே பெண் நாயன்மார் என்ற சிறப்புக் கொண்டவர் இந்த காரைக்கால் அம்மையார்.
சிவபெருமானின் திருவாயால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரிய காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் இந்த மாங்கனித் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்றால் கோவில் வளாகத்துக்குள்ளேயே நடத்தப்பட்டுக் கொண்டிருந்த திருவிழா இந்த ஆண்டு மக்கள் முன்னிலையில் வழக்கம் போல நடத்தப்பட இருக்கிறது. அதனைப் பற்றிய மேலும் தகவல்கள் இதோ!!

காரைக்கால் அம்மையார் வரலாறு

காரைக்கால் அம்மையார் வரலாறு

முன்பொரு காலத்தில் சோழமண்டலத்தின் காரைக்காலில் தனதத்தன் என்பவருக்கு புனிதவதி என்று ஒரு மகள் பிறந்தாள். செல்வம் கொஞ்சி வளர்த்த மகள் சிறு வயதிலிருந்தே சிவபெருமானின் பக்தையாக வளர்ந்தாள். அதனால் அவள் சிவனடியார்களுக்கு அன்னமிட்டு அந்த ரூபத்தில் சிவனைக் கண்டு மகிழ்ந்தாள்.
இப்படி ஒரு நாள் அவள் வயது வர, தன் ஆசை மகளை நாகப்பட்டினத்தில் வசித்த பரமதத்தன் என்ற வியாபாரிக்கு தனதத்தன் மணமுடித்து வைத்தார். எந்தக் குறையும் இல்லாமல் திருமணம் நடந்து முடிந்து, இவர்களும் ஆனந்தமாக வாழ்ந்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் வியாபார ரீதியாக வந்த ஒருவர் பரமத்ததனிடம் இரு மாங்கனிகளைக் கொடுத்துச் சென்றார். அந்த மாங்கனிகளை வீட்டில் உள்ள தன் மனைவியாரிடம் கொடுத்து விடுமாறு வேலையாளிடம் சொல்லிவிட்டு இவர் தன் வியாபாரத்தில் கவனம் செலுத்தினார்.
புனிதவதி சுவையாக அன்னம் சமைத்து தயார் செய்து தன் கணவருக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். அந்நேரத்தில் சிவபெருமான் தன் பக்தையின் புகழை உலகம் அறியும் பொருட்டு, சிவனடியார் போன்று வேடம் பூண்டு புனிதவதி வீட்டிற்குச் சென்றார். சிவனடியாரைச் சந்தித்த சந்தோஷத்தில் அவரை கும்பிட்டு இந்த மாங்கனிகளில் ஒன்றை வைத்து அவருக்கு அமுது படைத்தார். வந்த சிவனடியார் வயிறார சாப்பிட்டுவிட்டு வாழ்த்தி சென்றார்.
உணவு அருந்த வந்த பரமதத்தன் ஒரு மாங்கனியை சுவைத்துவிட்டு, "அடடே இது என்ன அமுதம் போன்று இருக்கிறதே! அந்த இன்னொரு பழத்தை எடுத்து வா' என்று கூறினார். செய்வது அறியாது திகைத்த புனிதவதி, பூஜை அறைக்குச் சென்று சிவபெருமானிடம் 'நான் இப்போது என்ன செய்வேன் இறைவா? என் கணவர் என்னிடம் இன்னொரு பழம் கேட்கிறாரே, அதை நான் சிவனடியாருக்கு அமது படைத்துவிட்டேனே! நான் என்ன செய்வேன்' என்று அழுதிருக்கிறார்.
உடனே புனிதவதியின் கையில் ஒரு மாங்கனி வந்தது. ஆனந்தத்தில் புனிதவதி அந்தக் கனியை தன் கணவருக்கு பரிமாறினாள். அதைச் சாப்பிட்ட பரமதத்தன் 'இது என்ன தேவாமிருதம் போல் இருக்கிறது, ஒரு மரத்துக் கனிகளின் சுவை எப்படி வேறுபடும்' என்று கேட்டார்.
இவை ஒரு மரத்துக் கனிகள் அல்ல, இரண்டாவது கனி எனக்கு சிவபெருமான் கொடுத்தது என்றார். என்ன? கடவுளிடம் நீ பேசுகிறாயா? அப்படியானால் நீ கடவுளுக்குச் சமம். நீ உயர்ந்தவள். உன்னுடன் என்னால் வாழ முடியாது என்று வீட்டை விட்டு வெளியேறினான். தன் கணவருக்காக பல காலம் காத்திருந்து, சிவபெருமானைக் காண பேயுருவம் கொண்டு கைலாசத்திற்கு கையால் நடந்துச் சென்றார்.
புனிதவதியாரைக் கண்ட சிவபெருமான் 'அம்மையே' என்று அன்புடன் அழைத்து, இனி உன் புகழ் இவ்வுலகம் எங்கும் பரவும் அம்மையே. அதற்காகத் தான் நீ இவ்வளவு துயரம் அடைந்திருக்கிறாய்! என்றுக் கூறி அன்று முதல் இன்று வரை இந்த மாங்கனி திருவிழா புனிதவதி அம்மையாரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் காரைக்காலில் வெகு விமர்சியாகக் கொண்டாடப் படுகிறது!

மாங்கனி திருவிழா 2022

மாங்கனி திருவிழா 2022

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் பொதுமக்களின் பங்களிப்பு இன்றி கோவில் வளாகத்துக்குள்ளேயே நடத்தப்பட்டுக் கொண்டிருந்த திருவிழா இந்த ஆண்டு மக்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடத்தப்பட இருக்கிறது. இன்று, ஜூலை 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது.
இதில் இன்று மாப்பிளை அழைப்பும், 12 ஆம் தேதி திருக்கல்யாணமும், 13 ஆம் தேதி முக்கிய நிகழ்வான மாங்கனி இரைத்தலும், 14 ஆம் தேதி அம்மையார் காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுமென கோவில் அறங்காவலர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டு திருவிழாவில் 75 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறுவதால் இந்த ஆண்டு கூட்டம் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவையொட்டி பக்தர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் கோவில் நிர்வாகத் தரப்பிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மற்ற சிறப்பம்சங்கள்

மற்ற சிறப்பம்சங்கள்

மாங்கனி திருவிழாவே ஒரு பெரிய சிறப்பம்சம் தான்! மாங்கனி திருவிழாவில் பங்கேற்று அம்மையை தரிசிப்பதே பெரிய புண்ணியம். மேலும் இங்கு மாங்கனி இறைப்பவர்கள் யாவரும், அம்மையிடம் ஏதேனும் வேண்டி அது அடுத்த ஆண்டு நடந்த பின்னர், அம்மைக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த மாம்பழங்களை இறைக்கின்றனர்.
பாரதியார் வீதி முழுக்க வளையல், பேக், விளையாட்டு பொருட்கள், திண்பண்டங்கள், வீட்டிற்கு தேவையான பொருட்கள் என பலதரப்பட்ட கடைகள் போடப்பட்டு இருக்கும். நீங்கள் அங்கே பலவற்றை ஷாப்பிங் செய்து மகிழலாம்.
மேலும் அருகிலேயே இருக்கும் நித்திய கல்யாணப் பெருமாள் கோவில், கைலாசநாதர் ஆலயம், திருநள்ளார் சனிஸ்வரபகவான் ஆலயம், அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் ஆலயம் ஆகியவற்றிற்கும் நீங்கள் சென்று வரலாம். நிச்சயம் காரைக்கால் புகழ்பெற்ற அல்வாவை சுவைக்க மறக்காதீர்கள்.

FAQs
எப்படி காரைக்காலை அடைவது?

புதுவை யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள காரைக்கால் புதுச்சேரியிலிருந்து 150 கிமீ தூரத்திலும் 270 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. சென்னை மற்றும் புதுவையிலிருந்து காரைக்காலுக்கு பொது மற்றும் தனியார் பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. சென்னை மற்றும் புதுவையிலிருந்து காரைக்கால் செல்ல 7 மணி மற்றும் 3 மணி நேரம் ஆகிறது.
அனைத்தும் தெரிந்துக் கொண்டீர்கள் அல்லவா! இன்றே திட்டமிட்டு திருவிழாவில் கலந்துக் கொண்டு அம்மையின் ஆசீர்வாதத்தைப் பெற்றிடுங்கள்!!!

NativePlanet Travel

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+