மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் லோனார் க்ரேட்டர் ஏரி ஒரு தேசிய புவி பாரம்பரிய நினைவுச்சின்னமாகும். இந்த ஓவல் வடிவ உப்பு ஏரி பூமியில் உள்ள நான்கு பாசால்டிக் பாறையில் க்ரேட்டர்களில் ஒன்றாகும். சில உயிரியல் காரணங்களால் அதன் நீர் இளஞ்சிவப்பு நிறமாக மாறிய பின்னர் இந்த ஏரி உலகளாவிய கவனத்தைப் பெற்றது.
50,000 ஆண்டுகளுக்கு முன்பு ப்ளீஸ்டோசீன் சகாப்தத்தின் போது விண்கல் மோதியதால் உருவான இந்த ஏரி இந்தியாவின் மிக முக்கியமான இயற்கை அதிசயங்களில் ஒன்றாகும்! இருப்பினும், இந்த ஏரி இன்றுவரை சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக இல்லை.
இந்த மாபெரும் இயற்கை அதிசயத்தின் சுற்றுலாவை மேம்படுத்த மகாராஷ்டிரா அரசு இந்த ஏரியின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு திட்டத்திற்காக 370 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. ஒதுக்கப்படும் பணம் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதற்காகவும், ஏரியை சுற்றியுள்ள காடுகள் மற்றும் வனவிலங்குகளை பராமரிப்பதற்க்காகவும் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனரமைப்பு பணிகளின் கீழ், மகாராஷ்டிரா அரசு அருகில் அமைந்துள்ள பழமையான கோவில்களை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளது. 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கஜானன் மகாராஷ்டிர சன்ஸ்தான், கோமுக் கோயில், கமல்ஜா தேவி கோயில் மற்றும் இன்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களும் இதில் அடங்கும். கோயில்கள் தவிர, 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிந்த்கெட் ராஜா கோட்டையும் இன்னும் பல கோட்டைகளையும் புனரமைக்க திட்டமிட்டுள்ளனர்.
அமராவதி கோட்ட ஆணையரின் மேற்பார்வையில் வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்பட்டு, சுற்றுவட்டாரத்தில் உள்ள கோயில்களைப் பாதுகாத்தல், வனவிலங்கு பாதுகாப்பு, ஆக்கிரமிப்பாளர்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் சாலை மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் ட்ரெக்கிங் செய்வதற்கும், படகு சவாரி செய்வதற்கும் வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறும் பழமையும் நிறைந்த இந்த ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்றுவதன் மூலம், மக்கள் இதன் பெருமையும் அழகையும் அறிந்துக் கொள்வதோடு, புல்தானா மாவட்டத்திற்கு வருமானம் அதிகரிக்கும் என்றும் எதிரிபார்க்கப்படுகிறது. இது உண்மையிலேயே இயற்கை அதிசயத்தை நெருக்கமாகக் காண நமக்கு கிடைக்கப் போகும் ஒரு அரிய வாய்ப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.