அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மழைக்கால திருவிழா குஜராத்தில் துவங்கிவிட்டது. ஆம்! உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் குஜராத்தின் மேக் மல்ஹர் பர்வ் திருவிழா தொடங்கிவிட்டது. சுற்றுலாத்துறை அமைச்சர் பூர்ணேஷ் மோடி விழாவை துவக்கி வைத்தார், மற்ற மாநிலங்களின் பிரதிநிதிகளும் இதன் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த விழாவினைப் பற்றிய மேலும் சிறப்பம்சங்களை இங்கே காண்போம்!

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் குஜராத்
பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்த குஜராத் இந்தியாவின் சிறந்த பயணத் தலங்களில் ஒன்றாக உள்ளது. யுனெஸ்கோ தளங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், ஜோதிர்லிங்கம், சார் தாம் கோயில்கள், அருங்காட்சியகங்கள், பரந்த ரான் ஆஃப் கட்ச் பாலைவனம் மற்றும் ஒற்றுமையின் சிலை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை குஜராத் வழங்குகிறது. உங்கள் முதல் வருகையின் போதே நீங்கள் குஜராத்தைக் கண்டு அதிசயப்பீர்கள்.

மேக் மல்ஹர் பர்வ் நடைபெறும் இடம் 2022
குஜராத்தில் இருக்கின்ற ஒரே மலைவாசஸ்தலமான சபுதாரா அதன் இயற்கை அழகுக்காக மாநிலம் முழுவதும் பிரபலமாக அறியப்படுகிறது.
குஜராத்தின் டாங் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நகரம் மாநிலத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது, அதுவும் குறிப்பாக மழைக்காலங்களில். இது மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது மற்றும் மழைக்காலத்தில் மிக அழகிய காட்சிகளை வழங்குகிறது.

மேக் மல்ஹர் பர்வ் 2022
ஒவ்வொரு ஆண்டும் குஜராத் சுற்றுலாத் துறையால் ஏற்பாடு செய்யப்படும் இந்த திருவிழா ஒரு மாத கால கொண்டாட்டமாகும். ஜூலை 30 ஆம் தேதி தொடங்கும் இந்த திருவிழா ஆகஸ்ட் 30 ஆம் தேதி முடிவடையும்.
இந்த ஒரு மாதம் முழுவதும் பல்வேறு கலாச்சார நிகழ்வுகள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் பாரம்பரிய திருவிழாக்கள் இடம்பெறும். இதில் கலந்துக்கொள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் சபுதாராவை நோக்கி படையெடுப்பது வழக்கம்.

மேக் மல்ஹரில் உள்ள சுவாரஸ்யமான செயல்பாடுகள்
தாஹி ஹண்டி, ரெயின் ரன் மராத்தான், படகு பந்தயம், நேச்சர் ட்ரெஷர் ஹன்ட், டாங்கி நடன நிகழ்ச்சிகள், வினாடி வினா போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் ஆகிவற்றில் நீங்கள் பங்கேற்கலாம். மழைக்கால விழாவையொட்டி, பாட்டு, ரங்கோலி, புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
கூடுதலாக, புகைப்படம் எடுத்தல், வார்லி ஓவியம், கலை ஓவியம், மூங்கில் கைவினை, பழங்குடியின விளையாட்டுப் போட்டிகள், படகுப் போட்டி, யோகா வகுப்புகள், இசை வகுப்புகள் மற்றும் பிற செயல்பாடுகளுக்கான கலை
மற்றும் படைப்பாற்றல் பட்டறைகள் இந்த மாதம் முழுவதும் நடைபெறும். மேலும், சுற்றுலாப் பயணிகள் சபுதாராவின் உள்ளூர் உணவு வகைகளையும் ருசித்து ரசித்து சாப்பிட முடியும்.

எழில்மிகு சபுதாரா
இயற்கையின் மடியில் அமைந்துள்ள சபுதாராவை அதன் மிகச்சிறந்த முறையில் ஆராய நீங்கள் பருவமழையில் அங்கு செல்லவேண்டும். அதாவது, இந்த திருவிழாவின் போது கட்டாயம் செல்ல வேண்டும். இயற்கையையும் அனுபவித்த மாதிரி இருக்கும், அதோடு இந்த கலாச்சார நிகழ்வில் கலந்துக் கொண்ட மாதிரியும் இருக்கும்.
கவர்னர் ஹில், பாலசினோர் டைனோசர் மியூசியம், எக்கோ பாயிண்ட், ரோப்-வே, ஷப்ரி தாம், டாங்கி நடனம், வாகாய் தாவரவியல் பூங்கா, ஹட்காட் கோட்டை, வான்ஸ்டா தேசிய பூங்கா, சூரிய உதயம், கிரா நீர்வீழ்ச்சி மற்றும் சூரிய அஸ்தமனம் பாயின்ட்கள்
ஆகியவை நீங்கள் இங்கு பார்க்க வேண்டிய இடங்களாகும்.
இயற்கை மற்றும் கலாச்சாரத்தின் துடிப்பான திருவிழாவில் பங்கேற்க மேக் மல்ஹார் பர்வ்விற்கு வருகை தரவும்!



Click it and Unblock the Notifications




