வயநாட்டில் நள்ளிரவில் அரங்கேறிய சோகத்தை நம்மால் காலத்திற்கும் மறக்க முடியாது. உறங்கும் போதே அநியாயமாய் பிரிந்த உயிர்கள் ஏராளம். அந்த இடத்தில் நாம் இல்லாவிட்டாலும், அவர்களின் இழப்பையும், சோகத்தையும், கண்ணீரையும் நம்மால் உணர முடிகின்றது. இரக்கமுள்ள எந்த ஒரு மனிதருக்கும் இது மிகப்பெரிய கஷ்டமாக தான் இருக்கும்.

அப்படி தான் இங்கே ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது! கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக நிதி வழங்குவதற்காக தமிழகத்தின் திண்டுக்கல்லில் நடைபெற்ற 'மொய் விருந்து' விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு ரூ.2.16 லட்சம் நிதியை மொய்யாக வழங்கி அசத்தியுள்ளனர் நம் திண்டுக்கல் மக்கள்! இது தாங்க, நம்ம தமிழ்நாட்டு மக்கள்!
சோகத்தில் மிதக்கும் மக்களுக்கு அனைவரும் நீட்டும் உதவிக்கரம்
கேரள மாநிலம் வயநாட்டில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தற்போது வரையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. வயநாடு பகுதி மக்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க போராடும் நிலையில் உள்ளனர். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாநில அரசுகள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தன்னார்வலர்கள் என பலரும் தங்களால் இயன்ற நிதியுதவி மற்றும் பொருளுதவிகளை அளித்து வருகின்றனர்.

பிரியாணி கடைக்காரர் முஜிபுர் ரகுமான் செய்த நெகிழ்ச்சி செயல்
இந்த நேரத்தில் நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் நாம் அவர்களுக்கு செய்ய வேண்டும் என கருதி திண்டுக்கல்லில் உள்ள ஒரு ஹோட்டல் உரிமையாளர் ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கினார். கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, திண்டுக்கல்லில் பிரியாணி கடைக்காரர் முஜிபுர் ரகுமான் தனது ஓட்டலில் மொய்விருந்து நடத்தி அதன் மூலம் கிடைத்த தொகையை கேரளா அரசுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மொய்விருந்துக்கு ஏற்பாடு செய்த முஜிபுர் ரகுமான்
திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்தவர் முஜிபுர் ரகுமான். இவர் இங்கு இரு இடங்களில் 'முஜிப்பிரியாணி' கடைநடத்துகிறார். வயநாடு மக்களுக்கு உதவ திண்டுக்கல் ரவுண்ட்ரோடு பகுதி ஓட்டலில் மொய்விருந்துக்கு ஏற்பாடு செய்தார். நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு தொடங்கிய விருந்து இரவு 11:00 மணி வரை நடந்தது. முதல் கட்டமாக 700 பேருக்கு பிரியாணி, இனிப்பு, சிக்கன் 65, முட்டை, தோசை,இட்லி என 10 வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டது.
போட்டிப் போட்டுக் கொண்டு மொய் வைத்த மக்கள்
ஆனால், மனித நேயம் மிக்க நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு கூடியதால் ஆயிரம் பேருக்கு மேல் விருந்தில் பங்கேற்றது நம்மை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கூட்டத்தை கருதி மேலும் 300 பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. விருந்தில் பங்கேற்ற மக்கள் சாப்பிட்ட இலையின் கீழ் ரூ.500 முதல் ரூ.2500 வரை மொய் வைத்தனர். சிறுவர்கள் கூட தங்கள் சேமிப்புநாணயங்களை கொடுத்து விட்டு சென்றனர். மொய் விருந்து மூலம் ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் கிடைத்தது.
எதிர்பார்த்ததை போல திரளாக வந்த ஊர்மக்கள்
இந்த மொய் விருந்தை ஏற்பாடு செய்த முஜிப் பிரியாணி கடை உரிமையாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வயநாடு நிலச்சரிவு ஓர் இயற்கை சீற்றம். இந்த சமயத்தில் வயநாடு மக்களுக்கு உதவ மொய் விருந்து ஏற்பாடு செய்துள்ளோம். இதனை நம் முன்னோர்கள் சுய விருந்து என பின்பற்றி வந்தனர். இந்த மொய் விருந்தில் யார் எவ்வளவு நிதிஉதவி செய்கிறாரக்ள் என்று யாருக்கும் தெரியாது. வயநாடு மக்களுக்கு நம்மால், நம் மக்களால் உதவி செய்ய வேண்டும் என இதனை ஏற்பாடு செய்தோம். எதிர்பார்த்ததை போல ஊர்மக்கள் திரளாக வந்து ஆதரவு தெரிவித்து உள்ளார்கள் என்று மொய் விருந்து ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.
நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்
இயற்கை பேரிடர் ஏற்படும் நேரத்தில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். மதம், இனம், மொழி பாகுபாடு இல்லாமல் நம்மால் முடிந்த உதவியை செய்யவேண்டும். அதற்கான முயற்சியாகதான் ஓட்டல் மூலமாக மொய்விருந்தை ஏற்பாடு செய்தேன். இதில் கிடைத்த தொகையை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மூலம் கேரளா அரசிடம் ஒப்படைக்க இருக்கிறோம். தொடர்ந்து நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம் என்றார்.



Click it and Unblock the Notifications




