எல்லா வயதினருக்குமான சுற்றுலா அம்சங்களை வழங்குவதில் புதுச்சேரியை அடித்துக் கொள்ள முடியாது என்று தான் சொல்ல வேண்டும். சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற பெரு நகர வாசிகள் கூட வார இறுதிகள் மற்றும் நீண்ட விடுமுறை நாட்களில் புதுச்சேரி நோக்கி படையெடுக்கிறார்கள். எங்கிருந்தும் புதுச்சேரியை சாலை மார்க்கமாக எளிதில் அணுகலாம். புதுவையில் இருந்து பெங்களூருவிற்கு விமானங்களும் இயக்கப்படுகின்றன. இப்போது புதிதாக புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் பிற நகரங்களுக்கு 19 இருக்கைகள் கொண்ட புதிய விமான சேவை துவங்கப்படவிருக்கிறது. இந்த ருசிகரமான விஷயத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள் இதோ!
சுற்றுலாப் பயணிகளுக்கு பிடித்த புதுச்சேரி
வண்ணமயமான கடற்கரைகள், அழகிய ஆரோவில், கோவில்கள், தேவாலயங்கள், துடிப்பான கஃபேக்கள், பப்கள், ஷாப்பிங் என புதுச்சேரி ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. நீங்கள் ஆன்மீகம், பொழுபோக்கு, பார்ட்டி என எந்த வகையான சுற்றுலா அம்சத்தை விரும்பினாலும் அதை உங்களுக்கு புதுச்சேரி வழங்கும். இதனால் தான் என்னவோ இது "மினி கோவா" என்றும் அழைக்கப்படுகிறது.
புதுச்சேரி to சென்னை, திருப்பதி
புதுச்சேரியில் இருந்து இந்த ஆண்டு தீபாவளிக்குள் சென்னை, திருப்பதி, வேலூர், மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருச்சி மற்றும் தூத்துக்குடி வழித்தடங்களில் தினசரி விமானங்களை இயக்க ஏர் சஃபா திட்டமிட்டுள்ளது. கூடிய விரைவில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் விமானம் மூலம் இணைக்கப்படும்.

வெற்றிகரமாக நடந்த சோதனை ஓட்டம்
சிங்கப்பூரைச் சேர்ந்த விமானக் குத்தகை நிறுவனமான ஏர் சஃபா, புதுச்சேரி, கோவை மற்றும் பெங்களூருவில் வெள்ளிக்கிழமை அன்று சோதனை ஓட்டத்தை நடத்தியது. வெற்றிகரமான சோதனை ஓட்டத்துக்கு பிறகு, "புதுச்சேரி மற்றும் கோயம்புத்தூரில் உள்ள இரண்டு தளங்களில் இருந்து 19 இருக்கைகள் கொண்ட எல்-410என்ஜி விமானங்களில் குறுகிய தூர விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளோம், இவ்விமானங்கள் இறங்க 600 மீட்டர் ஒடுதளம் போதுமானது" என்று ஏர் சஃபா இந்திய இயக்குனர் முருகப்பெருமாள் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் விமான சேவை
கடந்த 2013 ஜனவரியில் புதுச்சேரியின் லாஸ்பேட்டையில் புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்டது. புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. பயணிகள் எண்ணிக்கை குறைவால் விமான சேவை கடந்த 2014 பிப்ரவரி முதல் நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி முதல் விமான போக்குவரத்து சேவை தொடங்கியது. மத்திய அரசின் பிராந்திய இணைப்பு திட்டமான உதான் கீழ் விமான சேவை தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு புதுச்சேரியிலிருந்து ஐதராபாத், பெங்களூருக்கு விமான சேவைகள் தற்போது இயக்கப்படுகின்றன.
தமிழகத்தின் பிற நகரங்களுடன் இணைப்பு
இந்நிலையில் விரைவில் 19 இருக்கைகள் கொண்ட இலகுரக விமான சேவை தொடங்கப்படவுள்ளன. அதற்காக சிறிய ரக விமானம் புதுச்சேரி வந்தது. அவ்விமானத்தை பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் உள்ளிட்டோர் பார்த்தனர். அதன் சோதனை ஓட்டம் வெற்றிக்கரமாக பிப்ரவரி 25 அன்று நடந்து முடிந்தது. சிறிய நகரங்களை இணைக்க மத்திய அரசின் உதான் திட்டத்தில் 19 இருக்கைகள் கொண்ட விமான சேவையை தொடங்கவுள்ளது. இதன் மூலம் நாட்டின் முக்கிய சிறு நகரங்கள் விமானம் மூலம் இணைக்கப்படும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இறக்குமதி செய்யப்படும் விமானங்கள்
செக் குடியரசில் இருந்து ஐந்து விமானங்களை தற்போது வாங்கியுள்ளனர். அதோடு புதுச்சேரியிலிருந்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட வழித்தடங்களில் விமானங்களை இயக்க DGCA இன் அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளனர். அனுமதி பெற மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும் எனவும் ஆனால், தீபாவளிக்குள் செயல்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றும் தெரிகிறது.
நாளுக்கு இரண்டு முறை சென்னை to புதுச்சேரி விமான சேவை
பயணிகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் பாதைகள் தேர்வு செய்யப்படும். சில வழித்தடங்களில் தினமும் ஒன்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் இருக்கலாம். புதுச்சேரி-சென்னை வழித்தடத்தில், காலை மற்றும் மாலையில் இரண்டு விமானங்கள் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தீபாவளியில் இருந்து பறக்கலாம்
பெங்களூருவில் இருந்து மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்து வரும் பிற சிறிய மற்றும் பெரிய நகரங்களில் இருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாக புதுச்சேரி இருப்பதால் இந்த விமான சேவை என்பது மிகவும் அவசியம் தான். ஒரு நபருக்கான கட்டணம் ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே நீங்கள் தீபாவளி முதல் இந்த சிறு விமானங்களில் புதுவையில் இருந்து பறக்கலாம்!



Click it and Unblock the Notifications



