தமிழகத்தின் தலைநகரான சென்னையின் போக்குவரத்து நெரிசலைப் பற்றி சொல்லவா வேண்டும். அதுவும் குறிப்பாக பண்டிகை மற்றும் நீண்ட விடுமுறை நாட்களில் சென்னையிலிருந்து செல்லும் கூட்டத்தாலும், சென்னை நோக்கி வரும் மக்கள் வெள்ளத்தாலும் சென்னை ஸ்தம்பித்து போகிறது என்றே தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) மற்றும் சென்னை GST (எ) பைபாஸ் சாலையை இணைக்கும் புதிய சாலைக்கு முன்மொழியப்பட்டுள்ளது! இதன் மூலம் சென்னையில் வெகுவாக டிராஃபிக் குறையுமென்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்!
சென்னையில் புதிய பைபாஸ் சாலை
தமிழகத்தில் வசிக்கும் மொத்த ஜனத்தொகையின் 7 கோடி மக்களில் சுமார் 1 கோடி மக்கள் வசிக்கும் சென்னையில் இருந்து தினசரி லட்சக்கணக்கான மக்கள் மற்றும் பொருட்கள் சாலை மார்க்கமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினசரி பயணித்து வருகின்றனர். ஆனாலும், சென்னையின் வெளிப்புறத்தில் இருந்து வெளியில் செல்வதற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், சென்னை - தாம்பரம் - திண்டிவனம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கருங்குழி - பூஞ்சேரி சாலை இடையே 32 கி.மீ தூரத்திற்கு புதிய சாலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

மணிக்கணக்கில் காத்து கிடக்கும் பயணிகள்
வார இறுதி விடுமுறை, பண்டிகை விடுமுறை உள்ளிட்ட நாட்களில் சென்னைக்குள் வர வேண்டும் என்றால் திக்குமுக்காடி விடுகிறது. பெருங்களத்தூருக்கு முன்னர் இருந்தே துவங்கும் போக்குவரத்து நெரிசல் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி வரை நீண்டு நிற்கிறது. இதனால் வெறும் 30 கிமீ தூரத்தை கடக்க மக்கள் குறைந்தது 6-9 மணி நேரம் வரை காத்து கிடக்கின்றனர். ஒவ்வொரு பொங்கல், தீபாவளி மற்றும் நீண்ட விடுமுறை நாட்களில் இதே நிலைமை தான் நீடித்து வருகிறது.
பூஞ்சேரி-கருங்குழி இடையே புதிய பைபாஸ் சாலை
செங்கல்பட்டு பகுதிக்கு பதிலாக மாற்று வழித்தடத்தை தேர்வு செய்தால் சென்னைக்குள் சென்று வர மிகவும் எளிதாக இருக்கும் எனவும் போக்குவரத்து நெரிசலும் குறையும் என்றும் கூறப்பட்டு வந்தது. இதற்காக தான் தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை முக்கிய நடவடிக்கையில் இறங்கியுள்ளது. திண்டிவனத்தில் இருந்து செல்லும் சாலையில் மதுராந்தகம் அடுத்து கருங்குழி என்ற பகுதி வருகிறது. அங்கிருந்து செங்கல்பட்டு செல்லாமல் வலதுபுறம் திரும்பி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பூஞ்சேரிக்கு செல்லலாம். இதனால் பைபாஸ் சாலையில் வரும் மக்கள் இ.சி.ஆர் சாலை நோக்கி செல்ல வேண்டுமென்றால் இந்த சாலையை பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போல இது சென்னைக்கு மாற்று வழியாகவும் செயல்படும்.

80 லட்ச ரூபாயில் DPR
இந்த புதிய சாலையை அமைப்பதற்கு ரூபாய் 80 லட்சம் மதிப்பில் விரிவான சாத்தியக்கூறு திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்க தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன ஆணையம் ஒப்பந்தம் கோரியுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டால் செங்கல்பட்டிற்கு முன்பாக மதுராந்தகம் பகுதியில் உள்ள கருங்குழியில் இருந்து இ.சி.ஆரில் உள்ள பூஞ்சேரி வழியாக பெரும்பாலான வாகனங்களை திருப்பிவிட முடிவு செய்துள்ளனர். இந்த சாலை அமைக்கப்பட்டால் சென்னை - தாம்பரம் மார்க்கத்தில் பெருவாரியான அளவு போக்குவரத்து நெரிசல் குறையும் என்று அரசு நம்புகிறது. தற்போதுள்ள சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இந்த சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
வெகுவாக சென்னையில் டிராஃபிக் குறையும்
ஜி.எஸ்.டி சாலையைஇ.சி.ஆர் சாலையுடன் இணைக்கும் இந்த வழியானது வெகுவாக சென்னை போக்குவரத்து நெரிசலை மாற்றியமைக்கும். சென்னை நகருக்குள் வந்து அடையாறு, திருவான்மியூர், துரைப்பாகம், சோழிங்கநல்லூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு கருங்குழி - பூஞ்சேரி வழித்தடம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் மக்கள் சிரமமின்றி சென்னையை விட்டு வெளியே செல்லவும், மீண்டும் சென்னை திரும்பவும் ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications



