இந்திய ரயில்வே, மும்பையிலிருந்து மங்களூருக்குச் செல்லும் புதிய வந்தே பாரத் விரைவு ரயிலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது மும்பை-கோவா மற்றும் கோவா-மங்களூர் என்று இரண்டு வழித்தடங்களில் இயங்கும் வந்தே பாரத் ரயில் சேவைகளை ஒருங்கிணைத்து, பயண நேரத்தை குறைத்து, வசதியான சேவையாக மாற்ற இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

தற்போது இயக்கப்பட்டு வரும் மும்பை - கோவா வந்தே பாரத் ரயில் மும்பையில் இருந்து காலை 05.25 மணிக்கு புறப்பட்டு, பகல் 01.10 மணிக்கு கோவா சென்றடையும். அங்கிருந்த மங்களூரு சென்றடைய மாலை 6 மணி ஆகும். அதே போல் மங்களூரு- கோவா சேவை காலை 08.30 மணிக்கு துவங்கி, கோவாவிற்கு பகல் 01.10 மணிக்கு வரும். மும்பை சென்றடைய இரவு 9 மணி ஆகி விடும்.
ஆரம்பத்தில் மும்பை-கோவா இடையேயான வந்தே பாரத் 90 சதவீதம் சீட்கள் புக் ஆகி வந்தன. ஆனால் தற்போது இது 70 சதவீதமாக குறைந்து விட்டது. தற்போது இரண்டு வழித்தடங்களை ஒன்றாக இணைக்கும் திட்டத்தால் அதிகமானவர்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தும் வாய்ப்பு அதிகரிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள் :
புதிய வந்தே பாரத் ரயில், மும்பையிலிருந்து மங்களூருக்கு நேரடியாக சேவை வழங்கும். தற்போது மும்பையிலிருந்து மங்களூருவிற்கு செல்ல வேண்டும் என்றால் மும்பையில் இருந்து கோவா வரை வந்தே பாரத் ரயிலில் சென்று, அங்கிருந்து தனியாக மங்களூருக்கு மற்றொரு ரயிலில் தான் செல்ல வேண்டும். ஆனால், இப்போது இந்த இரண்டு வழித்தடங்களையும் இணைத்து, 12 மணிநேரத்தில் பயணம் முடியும் வகையில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால் இது மும்பை, கோவா, கர்நாடகா பகுதிகளை இணைக்கும் முக்கியமான திட்டமாக இருக்கும்.
பயணிகளுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் :
- பயண நேரம் கணிசமாக குறையவுள்ளதால், விரைவாகவும் சீரான முறையில் பயணிக்கலாம்.
- இரண்டு தனித்தனி ரயில்களைப் பயன்படுத்தும் பிரச்சனை இல்லாமல், ஒரு தொடர்ச்சியான சேவை கிடைக்கும்.
- வந்தே பாரத் ரயிலின் மேம்பட்ட வசதிகள், விரைவான சேவை ஆகியவை பயணிகளுக்கு பயனளிக்கும்.
சவால்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் :
இந்த சேவையை தொடங்குவதில் சில சவால்களும் உள்ளன. மும்பை ரயில் நிலையத்தில் ஏற்கனவே மாலை நேரத்தில் அதிகமான ரயில்கள் இயங்குவதால், புதிய நேர அட்டவணை திட்டமிடுவது முக்கியமாகும். மேலும், கோவா வழியாக மங்களூருக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை மந்தமாக இருப்பது ஒரு சவாலாக பார்க்கப்படுகிறது. இதற்காக, ரயில்வே நிர்வாகம் பயணத் தேவைகளை மதிப்பீடு செய்து, பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மும்பை-மங்களூர் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டால், இது மேற்கு கடற்கரைப் பகுதியில் வசிப்பவர்களுக்கு மிகப் பெரிய ஆதாயமாக இருக்கும். விரைவான, நவீன வசதிகள் கொண்ட ஒரு ரயில் சேவையாக இது பயணிகளின் வாழ்க்கையை எளிதாக்கும். இந்த திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டால், இந்திய ரயில்வேயின் சேவைகள் இன்னும் சிறப்பாக விரிவடையக்கூடும்.



Click it and Unblock the Notifications






