சென்னையிலிருந்து புதுச்சேரிக்கும், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கும் தினமும் வேலை நிமித்தமாக, அலுவல், சுற்றுலா போன்ற காரணங்களுக்காக ஏகப்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் ஏர் சஃபா எனும் விமான நிறுவனம் 19 இருக்கைகள் கொண்ட ஒரு சிறிய வகை விமான சேவையை சென்னை புதுச்சேரி இடையே இயக்கவுள்ளது. ஏற்கனவே பெங்களூரு மற்றும் ஹைதராபாத்திற்கு புதுவையில் இருந்து விமான சேவைகள் இயக்கப்படும் நிலையில் சென்னையும் சேர்ந்திருப்பது இரு நகரத்து பயணிகளை குஷியடைய வைத்துள்ளது! இந்த விமானத்தின் டிக்கெட் விலையை கேட்டால் நீங்கள் வியந்து போவீர்கள்!
சென்னை-புதுச்சேரி இடையே விமான பயணம்
எல்லா வயதினருக்குமான சுற்றுலா அம்சங்களை வழங்குவதில் புதுச்சேரியை அடித்துக் கொள்ள முடியாது என்று தான் சொல்ல வேண்டும். சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற பெரு நகர வாசிகள் கூட வார இறுதிகள் மற்றும் நீண்ட விடுமுறை நாட்களில் புதுச்சேரி நோக்கி படையெடுக்கிறார்கள். எங்கிருந்தும் புதுச்சேரியை சாலை மார்க்கமாக எளிதில் அணுகலாம். புதுவையில் இருந்து பெங்களூருவிற்கு விமானங்களும் இயக்கப்படுகின்றன. இப்போது புதிதாக புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் பிற நகரங்களுக்கு 19 இருக்கைகள் கொண்ட புதிய விமான சேவை துவங்கப்படவிருக்கிறது.
சுற்றுலாப் பயணிகளுக்கு பிடித்த புதுச்சேரி
வண்ணமயமான கடற்கரைகள், அழகிய ஆரோவில், கோவில்கள், தேவாலயங்கள், துடிப்பான கஃபேக்கள், பப்கள், ஷாப்பிங் என புதுச்சேரி ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. நீங்கள் ஆன்மீகம், பொழுபோக்கு, பார்ட்டி என எந்த வகையான சுற்றுலா அம்சத்தை விரும்பினாலும் அதை உங்களுக்கு புதுச்சேரி வழங்கும். இதனால் தான் என்னவோ இது "மினி கோவா" என்றும் அழைக்கப்படுகிறது.

புதுச்சேரியின் சுற்றுலா மேம்படும்
பெங்களூருவில் இருந்து மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்து வரும் பிற சிறிய மற்றும் பெரிய நகரங்களில் இருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாக புதுச்சேரி உருவாகி வருவதால், புதுச்சேரிக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று ஏர் சஃபா நிறுவனம் கூறியுள்ளது. இப்போது ஹைதராபாத் மற்றும் பெங்களூருவுடன் இணைக்கப்பட்டுள்ள விமான நிலையத்திலிருந்து அதன் இணைப்பை மேம்படுத்த புதுச்சேரிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இது சுற்றுலா மற்றும் வணிகத்திற்கு ஊக்கமளிக்கும் என்று நம்பப்படுகிறது.
கட்டணம் இவ்வளவு தானா?
புதுச்சேரி-சென்னை இடையே 19 பயணிகள் பயணிக்கும் வகையில் புதிய சிறிய விமான சேவை அக்டோபர் மாதம் முதல் இயக்கப்படவுள்ளது. ஏர் சஃபா எனப்படும் விமான நிறுவனம் புதுச்சேரி-சென்னை இடையே விமான சேவையை துவக்கவுள்ளது. இரு நகரங்களுக்கும் இடையே தினமும் ஐந்து முறை இந்த விமான சேவை செயல்படுத்தப்படும். விமான கட்டணமாக ரூ.1500 க்கும் குறைவான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு இயக்கப்படவிருந்த இண்டிகோ விமான சேவை நிர்வாக காரணங்களுக்காக அக்டோபர் மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலிருந்து கொச்சி மற்றும் திருப்பதிக்கு இயக்கப்படவிருந்த விமான சேவை அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications





