தமிழகத்தில் ஒரு புதுவிதமாக பரவி வரும் ஸ்கரப் டைபஸ் தொற்றால் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் 10 முதல் 20 பேர் அறிகுறிகளுடன் தமிழக மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் ஸ்கரப் டைபஸ் தொற்று பரவி வருகிறது. ஸ்கரப் டைபஸ் அறிகுறிகள் இருக்கும் பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனையை அணுகுமாறு சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது!

தமிழகத்தில் பரவி வரும் 'ஸ்க்ரப் டைபஸ்'
பருவமழை காலங்களில் வைரஸ் தொற்று ஏற்படுவது இயல்பான நிலையில், இந்த முறை தமிழகத்தில் பாக்டீரியா தொற்று உருவாகியுள்ளது. 'ஸ்க்ரப் டைபஸ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த தொற்று, ரிக்கட்சியா (Rickettsiae) எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது அவர்களுக்கு இந்த நோய் ஏற்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் அதிக அளவில் பரவல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் இந்த பாதிப்பு காணப்படுகிறது.
காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தடிப்புகள்
விவசாயிகள், வனப்பகுதிகளில் வசிப்பவர்கள், புதர் மண்டிய பகுதிகளில் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ள பொது சுகாதாரத்துறை, இந்த நோய்க்கு மருத்துவரின் பரிந்துரைப்படி அசித்ரோமைசின், டாக்ஸிசைக்கிள் என்ற மருந்துகள் தரப்படுவதாகவும் அறிவித்துள்ளது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தடிப்புகள் மற்றும் உடல் அரிப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக உள்ளது. 5 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருப்பவர்களுக்கு இந்த தொற்று அபயாம் இருப்பதாக கூறப்படுகிறது.

கண்டுக்கொள்ளாமல் இருக்கக்கூடாது
ஸ்கர்ப் டைபஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் போலவே அறிகுறிகள் இருக்கும் என கூறும் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் லோகவெங்கடேஷ், இவற்றை கண்டுக்கொள்ளாமல் விட்டால் சிறுநீரக செயலிழப்பு, நுரையீரல் தொற்று, இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் ஏற்படும் என எச்சரிக்கிறார்.
5 நாட்களுக்கு காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகவும்
தண்ணீர் குடிக்காமல், சிறுநீர் கழிக்காமல், வாந்தி, அதீத தலைவலி, மலத்தில் இரத்தம் போன்ற பிரச்சனைகளை குழந்தைகள் எதிர்கொண்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அதுமட்டுமல்லாமல், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு காய்ச்சல் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என அறிவுறுத்துகிறார் மருத்துவர். டிராம்பிகுலிட் மைட் (Trombiculid mite) எனப்படும் ரசாயனம் கலந்திருக்கும் பூச்சி விரட்டிகளை பயன்படுத்த வேண்டும். இது பொதுவாகவே, கொசுவத்தி சுருள், ஸ்ப்ரே போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. செடிகள் இருக்கும் இடத்தில் இந்த பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதன் மூலம் தொற்று ஏற்படுவதில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

அலட்சியம் காட்ட வேண்டாம்
உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றாலோ அல்லது இதயம், நுரையீரல், சிறுநீரகம் சார்ந்து பாதிப்புகள் ஏற்பட்டாலோ, ரத்த நாளத்தின் வழியே திரவ மருந்துகளை செலுத்தி உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் உயர் சிகிச்சை மையங்களில் நோயாளிகளை அனுமதிக்க வேண்டும். பூச்சிகள் ஏதேனும் கடித்தாலும் அலட்சியம் காட்டாமல் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். ஸ்கரப் டைபஸ் தொற்று சிகிச்சை தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களும் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன



Click it and Unblock the Notifications



