வேலை, கல்வி மற்றும் குடும்ப தேவைகளுக்காக பயணிப்பவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்த தாம்பரம்-கோவை வாரந்திர ரயில் சேவை தற்போது பிப்ரவரி 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஸ்லீப்பர் மற்றும் ஜெனரல் கிளாஸ் விருப்பங்கள் அடங்கிய இந்த ரயிலின் கோச் கலவை, இது பரந்த அளவிலான பயணிகளுக்கு மலிவு மற்றும் வசதியான பயணத்தை வழங்கி வருவதால், தாம்பரம்-கோவை வாரந்திர சிறப்பு ரயில் சேவை மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. தற்போது ரயில் சேவை நீட்டிப்பு குறித்து வெளியான செய்தி பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!

தாம்பரம்-கோவை இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரயில்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கல்வி, வேலை, தொழில் என பல்வேறு விஷயங்களுக்காக சென்னையில் தங்கி உள்ளனர். இவர்கள், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் என்பதால், அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்கள் கூட்ட நெரிசலின்றி பயணங்களை மேற்கொள்ள முடிகிறது. சமீபத்தில்கூட, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தாம்பரத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
சொந்த ஊர் நோக்கி படையெடுக்கும் மக்கள்
சென்னை தமிழக தலைநகராக நவீனமும், கலாச்சாரமும் நிறைந்த ஒரு பெருநகரமாக மட்டுமல்லாமல், வந்தாரை வாழ வைக்கும் சென்னையாக பல லட்ச மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்து வருகிறது. பொங்கல், தீபாவளி, ஆயுத பூஜை மற்றும் நீண்ட விடுமுறை நாட்களில் சென்னையில் தங்கி வேலை பார்க்கும் பல லட்ச மக்களும் தங்களின் சொந்த ஊர்கள் நோக்கி படையெடுக்கின்றனர். எவ்வளவு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கினாலும் போதுமானதாக இருப்பது இல்லை. இருப்பினும், தென்னக ரயில்வே ஒரு சூப்பர் முடிவை எடுத்துள்ளது.
சிறப்பு ரயில் சேவையை நீட்டித்த ரயில்வே
தாம்பரத்தில் இருந்து, கோவைக்கு சிறப்பு ரயில் அக்டோபர் 11 ஆம் தேதி முதல் நவம்பர் 29 ஆம் தேதி வரையும், கோவையில் இருந்து தாம்பரத்துக்கு அக்டோபர் 13 ஆம் தேதி முதல், டிசம்பர் 1 ஆம் தேதி வரையும் என மொத்தம் 8 முறை இயக்கப்பட்டது. இந்நிலையில், இந்த சிறப்பு ரயில்வே சேவையை மீண்டும் நீட்டிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எந்தெந்த இடங்களில் நின்று செல்லும்
தாம்பரத்தில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் மாலை, 6 மணிக்கு கிளம்பும் இந்த ரயிலானது, செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பன்ருட்டி, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன் சத்திரம், பழநி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனுார் வழியாக கோவையை அடைகிறது. பிறகு, இதே வழித்தடத்தில், கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.
பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
தாம்பரம்-கோவை ரயிலுக்கான வரவேற்பு தொடர்ந்து கிடைத்து வரும் நிலையில், பயணிகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளதால், 2 ஆம் வகுப்பு பொது பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரயிலில், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு அன்ரிசர்வ் பெட்டிகள், இரண்டு எஸ்.எல்.ஆர்./ டி பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் - கோவை வாராந்திர சிறப்பு ரயில் சேவை பிப்ரவரி 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு இந்த சேவை மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.



Click it and Unblock the Notifications



