தமிழகத்தின் தலைநகராக ஒரு துடிப்பான நகரமாக மட்டுமல்லாமல், சென்னை பலவிதமான வித்தியாசமான அனுபவங்களையும், உணவு விருப்பங்களையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் வழங்குகிறது. அந்த வகையில் நீங்கள் சென்னையில் கொரியன் BTS ரெஸ்டாரன்ட் முதல், சைனீஸ், பிரெஞ்சு, இத்தாலியன், பர்மீஸ் வரை பல வகையான ரெஸ்டாரன்ட்களை பார்த்து இருப்பீர்கள். தற்போது சென்னைக்கு அருகில் உள்ள முட்டுக்காடு படகு குழாமில் தமிழகத்திலேயே முதன் முதலாக இரண்டு அடுக்கு மிதக்கும் உணவகம் திறக்கப்பட்டுள்ளது! உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கப்போகும் இந்த உணவகம் பற்றிய முழு தகவல்கள் இதோ!
சென்னைக்கு அருகே மிதக்கும் உணவகம்
சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு படகு குழாம் அமைந்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் செயல்படும் இந்த படகு குழாமில், மக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் விதமாக மிதவை படகுகளும், இயந்திர படகுகளும் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறையில் குடும்பத்தினருடன் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து, படகு சவாரி செய்து உற்சாகமடைகின்றனர். இதனால், விடுமுறை நாட்களில் முட்டுக்காடு படகு குழாமில், சுற்றுலா பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தின் முதல் மிதவை உணவகம், முட்டுக்காடு பகுதியில் ரூ.5 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.
5 கோடி மதிப்பீட்டில் தயாரான உணவகம்
தமிழகத்தின் முதல் மிதவை உணவகம் கப்பல் (Floating Restaurant) சென்னை முட்டுக்காடு பகுதியில் சுமார் 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இரண்டு அடுக்குகளுடன் இந்த உணவக பயணக் கப்பல் அமைக்கப்பட்டுள்ளது. நீளம் 125 அடியும், அகலம் 25 அடியும் கொண்டதாக இது உருவாக்கப்பட உள்ளது. உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து வசதிகளும் அடங்கிய மிதவை உணவகம்
முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமயலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறை அமைக்கப்பட உள்ளது. கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இம்மிதவை படகு உணவகம் 3000 சதுர அடி பரப்பளவுடன் இரண்டு அடுக்குகள் கொண்ட 100 நபர்கள் அமர்ந்து உணவருந்தும் வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அலுவலக கூட்டங்கள், சிறிய விருந்து அல்லது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் போன்றவற்றை மக்கள் இங்கே நடத்திக்கொள்ளலாம். இரண்டாவது தளம் உணவு சாப்பிடும் இடமாகவும், பப்பே முறையில் உணவு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சர்வதேச விருந்தினர்கள் பங்கேற்கும் விருந்துகளில் அதற்கேற்ப உணவுகள் மாறும் என்றும் கூறப்படுகிறது.
முட்டுக்காட்டில் தமிழகத்தின் மிதவை உணவகம் திறப்பு
முட்டுக்காடு படகு குழாமில் ரூபாய் 5 கோடி மதிப்பில் தயாரான மிதவை உணவக கப்பலினை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர். இந்த மிதவை உணவகம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமும் காலை 7.30 மணி முதல்
மீட்புப் படகுகள், தீயணைப்புக் கருவிகள் உள்ளிட்ட அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் காலை 7.30 மணி முதல் இங்கு உணவகம் இயங்கும். குழுவாகச் சென்று உணவருந்த விரும்பினால் முன்பதிவின் பேரில் செய்துகொடுக்கப்படும் என்றும் முட்டுக்காடு படகு குழாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் குழுவாகச் சென்று உணவருந்த விரும்பினால் முன்பதிவின் பேரில் செய்துகொடுக்கும் வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்வது எப்படி?
தற்போது மிதவை உணவகம் திறக்கப்பட்டுள்ளதால், முதற்கட்டமாக உருவாக வருபவர்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. எவ்வளவு பேர் வருகிறார்கள் அதற்கு ஏற்றார் போல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் தனிநபராக வருபவர்களுக்கும், விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளது. ஜனவரி மாதம் இறுதிக்குள் அனைவரும் மிதவை உணவகத்தை பயன்படுத்துவதற்கான வழி வகைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக ஆன்லைன் மூலமா புக்கிங் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது, 090378 50857 என்னை தொடர்பு கொள்ளலாம் என தகவல் தெரிவித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications



