ஒரே நாள் இரவுல ஒரே ஊரே அழிந்த கதை என்றால் அது நம்ம தனுஷ்கோடிக்கு தான் பொருந்தும். மக்கள் வாழத் தகுதியற்ற இடம் என்று இந்திய அரசால் 1964 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இடம் இது. 22.12.1964 அன்று ஒரு சாதாரண இரவு தான் என்று உணவு சாப்பிட்டு உறங்க போன தனுஷ்கோடி மக்கள் அன்றிரவு நடக்கப் போகும் அசம்பாவிதத்தை அறிந்திருக்கவில்லை. அவர்கள் அனைவரும் மறுநாள் காலை தனுஷ்கோடி சின்னாபின்னமாக மாறப் போகிறது என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்! அன்று நடந்த கொடூரத்தை நேரில் பார்த்தவர்கள் இன்றும் சரியாக இரவில் உறக்கம் வருவது இல்லை என்று கூறுகிறார்கள்!
நிம்மதியாக வாழ்ந்து வந்த தனுஷ்கோடி மக்கள்
தமிழ்நாட்டில் பாம்பன் தீவின் தென்கிழக்குப் பகுதியில் இருப்பது தனுஷ்கோடி. ஒருபக்கம் இந்தியப்பெருங்கடல், ஒருபக்கம் வங்காள விரிகுடா நடுவே நகரம் என அமைதியான பகுதி. அமைதியான கடல், கடலைச் சார்ந்த வாழ்க்கை, துறைமுகம், ரயில்வே ஸ்டேஷன், தபால் அலுவலகம், பள்ளிக்கூடம் என நிம்மதியான வாழ்வை வாழ்ந்து வந்தனர் அப்பகுதி மக்கள். ஆனால் அடுத்து வரவிருக்கும் பேரழிவை அவர்கள் கனவிலும் கூட நினைத்து இருக்க மாட்டார்கள்!
டிசம்பர் 22 - தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு தினம்
ஒரே ஓர் இரவில் நடந்த சம்பவங்கள் ஒட்டுமொத்த ஊரையும் புரட்டிப்போட்டது. அந்த இரவு, டிசம்பர் 22, 1964 அன்று வந்தது. அதற்கு 5 நாட்களுக்கு முன் தெற்கு அந்தமான் கடலில் உருவான சிறு காற்றழுத்த தாழ்வு நிலை டிசம்பர் 19 அன்று புயலாக மாறியது. டிசம்பர் 21 க்குப் பிறகு மேற்கு நோக்கி, ஒரே நேர்கோட்டில் கிட்டத்தட்ட 400 முதல் 550 கிமீ வேகத்தில் நகர்ந்தது. டிசம்பர் 22 அன்று புயல் தனுஷ்கோடியை அடைந்த நிலையில், 280 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் இருந்தது. அலைகளோ கிட்டத்தட்ட 22 அடி உயரத்தில் வந்து ஊரை தாக்கின.

280 கிமீ வேகத்தில் காற்று வீசினால் நாம் என்ன செய்வது
இரவு முழுக்க முழுக்க கொட்டி தீர்த்த கன மழையும், புயலும், சூறைக் காற்றும் தனுஷ்கோடியை புரட்டி போட்டது. பெரிய கட்டிடங்களும், வீடுகளும், தேவலாயமும், பாலங்களும் இடிய ஆரம்பித்தன. வங்கக்கடல் பொங்கி எழும்பி 22 அடி உயர அலையாக ஊருக்குள் சென்றது. புயலின் வேகம் 280 கிமீ, நினைத்து பாருங்களேன், இந்த வேகத்தில் காற்றும் மழையும் ஊருக்குள் வந்தால் ஊர் என்னவாகும்.
ஒரே நாள் இரவில் சின்னாபின்னமாகிய தனுஷ்கோடி
பிரிட்டிஷ்காரர்களால் கட்டப்பட்ட பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ரயில் நிலையம், கடற்கரை ஓரத்தில் இலங்கைக்கு வணிகத்திற்கு செல்லும் கப்பல் வசதியுடன் பெரிய துறைமுகம், மீனவர்கள் வணங்கிய பிள்ளையார் கோவில், பிரிட்டிஷ்காரர்கள் வணங்கிய தேவாலயம், மீனவர்கள் உறவினர்களுக்கு கடிதங்கள் அனுப்பி மகிழ்ந்த தபால் நிலையம், என அனைத்து ஒரே இரவில் காணாமல் போய்விட்டது.
பரிதாபமாக உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோர்
புயலின் கோரத்தை அறியாமல் அந்த வேளையில் தனுஷ்கோடியை நெருங்கிக் கொண்டிருந்தது பாம்பன் - தனுஷ்கோடி பாசஞ்சர் ரயில். தண்டவாளத்தில் சென்றுகொண்டிருந்த ரயில் தண்டவாளத்தில் இருந்து தூக்கிவீசப்பட்டு ரயிலில் இருந்த பயணிகளையும் கடலுக்குள் கொண்டு சென்றது. ரயிலில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உட்பட தனுஷ்கோடியில் வாழ்ந்த மக்கள் என 4 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் இந்த கோரப்புயலின் பசிக்கு பலியாகினர்.
ஊர் முழுக்க ஒலித்த மரண ஓலம்
ஊருக்குள் மக்கள் அலறியதும், மரண ஓலமும் எங்கு பார்த்தாலும் எதிரொலித்தது. என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் கதறி அழுது கொண்டிருந்தனர். மறுநாள் விடியும் போது, ஊர் முழுக்க பிணங்களின் குவியல் காணப்பட்டது. அடையாளம் தெரியாத பிணங்களை பெரிய பெரிய குழி தோண்டி அரசாங்கம் புதைத்தது. பாம்பன் பாலமும் அந்த புயலில் சேதமடைந்ததால், எந்த வித போக்குவரத்துமின்றி தனித்து விடப்பட்ட தீவாக மாறியது தனுஷ்கோடி, 1964 ஆம் ஆண்டு ஐ.நா தனுஷ்கோடி மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமில்லை என்று அறிவித்தது.
இன்னமும் ஊரை விட்டு நகராத பூர்வகுடி மக்கள்
1964 க்கு பிறகு இது ஆளரவமற்ற தீவாக காட்சியளித்தது. மனிதர்கள் வசிக்கத் தகுதியற்ற இடமாக இதனை அறிவித்தது அரசு. இருபது வருடங்களுக்குப் பிறகு அகதிகள் வருகை, பாதுகாப்புத் துறையின் கண்காணிப்பு என பதற்றமான பிரதேசமாக தனுஷ்கோடி மாறியது. இந்த புயலின் கோரப்பிடியில் இருந்து தப்பித்த ஒரு சிலர் ஊரை காலி செய்து வேறு நகரங்களுக்கு சென்று விட்டனர். இன்னமும் இது எனது ஊர், இதை விட்ட என்னால் வர முடியாது என தனுஷ்கோடியின் மீது காதலுடன், அவ்வப்போது ஏற்படும் கடல் சீற்றங்களையும், புயலையும் எதிர் கொண்டு சவாலாக வாழ்ந்து வருகின்றனர் - தனுஷ்கோடியின் பூர்வகுடி மக்கள்!



Click it and Unblock the Notifications





