திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் 134 ஏக்கர் நிலத்தில் 75,000 சதுர கிமீ பரப்பளவில் ரூ.1200 கோடி செலவில் பிராமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. நவீன கட்டமைப்பில், உலகத்தர வசதிகளுடன் எழுப்பட்டுள்ள திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 2 ஆம் தேதி திறந்து வைக்கிறார்! ஒரு நாளைக்கு எத்தனை விமானங்கள் புறப்படும், அதிநவீன கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் இதோ!
திறப்புவிழா காணும் திருச்சியின் புதிய விமான முனையம்
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையம் அமைப்பதற்கான பணிகளை கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி பிரதமர் மோடி காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகளை 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தாமதம் அடைந்து இப்போது தான் முழு வீச்சில் பணிகள் முடிக்கப்பட்டு, தற்போது பிராமாண்ட திறப்பு விழா காணப் போகிறது.

பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கட்டமைப்பு
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் தமிழக பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திலிருந்து ஈர்க்கப்பட்ட வடிவமைப்பை பிரதிபலிக்கிறது. புதிய முனையத்தின் பிரதான நுழைவு வாயில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ராஜ கோபுரத்தை ஒத்து இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. அதுமட்டுமில்லாமல் புதிய முனையத்தில், தமிழக கலாச்சார, பண்பாடு மற்றும் திருவிழாக்களை மையமாக கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
ஒரே சமயத்தில் 6,500 பயணிகள்
புதிதாக கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய ஒருங்கிணைந்த முனையம் 60,723 சதுரமீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரே சமயத்தில் 4,000 சர்வ தேச பயணிகள், 1,500 உள்நாட்டு பயணிகளை கையாள முடியும். திருச்சி சர்வதேச விமான நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், ஆண்டுக்கு 4.5 மில்லயன் பயணிகளை கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிநவீன வசதிகளுடன் செயல்பாட்டுக்கு வரும் புதிய முனையம்
புதிய விமான முனையத்தின் புறப்பாடு பகுதியில் 10 வாயில்கள், வருகை பகுதியில் 6 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 40 குடியேற்றப்பிரிவு மையங்கள், 48 செக்-இன் மையங்கள், 3 சுங்கப்பிரிவு மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள், 10 இடங்களில் ஏரோ ப்ரிட்ஜ், 3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகள், 26 இடங்களில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர், 1,000 கார்களை நிறுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஜனவரி 2 ஆம் தேதி பிரமாண்ட திறப்புவிழா
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், 'கிரிஹா-4' தர நிலை கொண்டதாக இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையில் விமானநிலையத்தின் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.75 கோடி செலவில் 42.5 மீட்டர் உயரம் கொண்ட கண்காணிப்பு கோபுரத்துடன் கூடிய வான் கட்டுப்பாட்டு அறை கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருச்சி விமானநிலையத்தின் புதிய முனையம் வரும் ஜனவரி 2 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதில், பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருச்சியிலிருந்து விமான சேவை
திருச்சியிலிருந்து கீழ்கண்ட இடங்களுக்கு விமான சேவைகளுக்கு இயக்கப்படுகின்றன!
1. சென்னை
2. சிங்கப்பூர்
3. மலேசியா
4. பெங்களூரு
5. ஷார்ஜா
6. இலங்கை
7. துபாய்
8. ஹைதராபாத்
9. குவைத்
10. மஸ்கட்
11. அபுதாபி
12. தோஹா
13. விஜயவாடா



Click it and Unblock the Notifications




