நம்மில் பலருக்கும் தெரியும் வெனிஸ் தான் உலகின் அழகான மிதவை நகரம் என்று. உலகப்பிரசித்தி பெற்ற இந்த அழகான நகரத்தின் முக்கிய ஈர்ப்பு வெனிஸ் நகரைச் சுற்றியுள்ள அழகிய கால்வாய்களும், அதில் மக்கள் செல்லும் கோண்டோலா எனப்படும் படகு சவாரியும் தான்! ஆனால் இந்த அழகிய விஷயம் இப்போது ஆபத்தில் உள்ளது. ஆம்! வெனிஸ் நகரை படகில் சுற்றிப்பார்ப்பது தான் அதன் பிரதான ஈர்ப்பாக இருந்தாலும், இப்பொழுது வெனிஸ் கடுமையான வறட்சியை எதிர்க்கொண்டு வருகிறது. இதனால் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

வறட்சியை சந்திக்கும் மிதவை நகரம் - வெனிஸ்
வெனிஸின் அமைதியான கால்வாய்கள் வழியாக ஒரு கோண்டோலாவில் அமர்ந்துக் கொண்டு அந்த அழகிய நகரை சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது நம்மில் பலரின் பக்கெட் லிஸ்டில் இருக்கும் ஒரு ஆசையாகும். ஆனால் முதலுக்கே மோசம் வந்து விட்டது என்பது போல், வறட்சி காரணமாக கால்வாய்களில் தண்ணீரைக் காணவில்லை. தண்ணீர் இல்லாமல் படகில் எப்படி செல்ல முடியும். வெனிஸுக்கு பயணம் செய்து கோண்டோலாவில் உட்கார முடியவில்லை என்றால், பிறகு ஏன் வெனிஸுக்குச் செல்ல வேண்டும். என்னடா இது மிதவை நகரத்திற்கு வந்த சோதனை!

சாலைகளை விட படகு சவாரியே பிரதானம்
தினசரி பயணத்திற்கு நடைமுறையில் சாலைகள் இல்லாத நகரத்தில், வெனிஸ் நகர மக்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கால்வாய்களிலே கோண்டோலாவில் சுற்றி வருவது வழக்கம். இந்த சிறு கால்வாய்கள் அனைத்தும் வறண்டு கிடப்பதால், நகரின் பல பகுதிகள் ஸ்தம்பித்துள்ளன. பொதுவாக, கோண்டோலாக்கள் மற்றும் வேப்பரேட்டோக்கள் அல்லது நீர் பேருந்துகள் நகரைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் அழைத்துச் செல்கின்றன. இந்த கால்வாய்கள் அனைத்தும் இப்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன.

முக்கிய நீர் வழிகள் வழக்கம் போல் இயக்கம்
ஆல்ப்ஸ் மலைகள் போதுமான பனிப்பொழிவைப் பெறவில்லை, அதாவது வெனிஸில் உள்ள கால்வாய்கள் குறைந்த அலைகளை எதிர்கொள்கின்றன. இது நாட்டின் பல பகுதிகளில் உள்ள முக்கியமான ஏரிகள் மற்றும் நதி அமைப்புகள் வறண்டு போவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ஆனாலும் வெனிஸில் உள்ள சிறிய கால்வாய்கள் தற்போது சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தாலும், கிராண்ட் மற்றும் கியுடெக்கா கால்வாய்கள் போன்ற பரந்த மற்றும் முக்கிய நீர்வழிகள் சாதாரணமாக இயங்குகின்றன.

இத்தாலியில் கடும் வறட்சி
இத்தாலிய ஏரிகள், ஆறுகள் மற்றும் கால்வாய்களில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. இத்தாலியின் மிக நீளமான நதியான போவில் இயல்பை விட 61 சதவீதம் குறைவான நீரே இருப்பதாக Legambiente சுற்றுச்சூழல் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜூலை 2022 இல், இத்தாலி 70 ஆண்டுகளில் இல்லாத மோசமான வறட்சியை சந்தித்தது, போ நதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

நிலைமை மாறும் என எதிர்பார்ப்பு
இத்தாலிய நதி போ மட்டுமல்ல, வடக்கு இத்தாலியில் உள்ள ஆறுகள் கூட குறைந்த நீர் மட்டங்களைப் பதிவுசெய்துள்ளன, அங்கு படகுகள் கூட நீரில் செல்ல கடினமாக உள்ளது, இதனால் பார்வையாளர்கள் சான் பியாஜியோ தீவை அடைய முடியவில்லை. இத்தாலி இன்னும் தண்ணீர் பற்றாக்குறையில் உள்ளது, கடைசி நம்பிக்கை வசந்த காலம், இது போ பள்ளத்தாக்கில் அதிக மழை பெய்யும் காலம். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பெய்யும் மழை நிலைமையை மாற்றும் என்று இத்தாலியர்கள் நம்புகிறார்கள். நல்லதே நடக்கட்டும்.
கேரளாவில் உள்ள ஆலப்புழாவின் உப்பங்கழிகளும், படகுகளும் வெனிஸ் நகரத்தைப் பிரதிபலிப்பதால் தான் அது இந்தியாவின் வெனிஸ் என்றழைக்கப்படுகிறது. இந்தியாவிலும் ஒரு வெனிஸ் இருப்பது பற்றி உங்களுக்கு தெரியுமா!



Click it and Unblock the Notifications



