டாஷி ஜோங் மொனாஸ்ட்ரி என்றழைக்கப்படும் இந்த மடாலயம் பாலம்பூர் நகரத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. திபெத்திய அகதிகள் வசிக்கும் வசிப்பிடமாகவும் இந்த மடாலயம் திகழ்கிறது.
ஆன்மீக மடாலயம் போன்றல்லாமல் ஒரு பொதுசமூகக் கூடம் போன்று தோற்றமளிப்பது இதன் சிறப்பம்சமாக சொல்லப்படுகிறது. திபெத்திய மலைப்பிரதேச கோயில்களின் அமைப்பை போன்றே அமைக்கப்பட்டுள்ள இந்த மடாலயத்தின் கூரைப்பகுதியில் வண்ண வண்ணக்கொடிகள் காற்றில் பறந்த வண்ணம் உள்ளன.
பௌத்த மரபுக்காக எழுப்பப்பட்டுள்ள இந்த மடாலயத்தில் உள்ள ஸ்தூபம் போன்ற அமைப்பு கலையம்சத்துடன் கண்களை கவர்வதாகவும் ஆன்மிக அமைதியை பிரதிபலிப்பதாகவும் காட்சியலிக்கிறது.
எனவே அமைதியை நாடுபவர்களும் பௌத்த யாத்ரீகர்களும் இந்த மடாலயத்திற்கு பெருமளவில் விஜயம் செய்கின்றனர். திபெத்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஒட்டுமொத்த மடாலயத்தின் அலங்கார அமைப்புகள் காணப்படுகின்றன.
விதவிதமான திபெத்திய கலைப்பொருட்கள், ஓவியங்கள் மற்றும் உபயோகப்பொருட்களை இந்த மடாலய வளாகத்திலேயே அமைந்துள்ள கைவினைப்பொருள் அங்காடியில் பார்வையாளர்கள் வாங்கலாம்.
அது மட்டுமல்லாமல் ரம்மியமான நந்தவனப்பூங்காக்கள், உணவகங்கள் மற்றும் கைவினைப்பொருள் அங்காடிகள் போன்றவையும் சுற்றிலும் காணப்படுவதால் இந்த டாஷி ஜோங் மடாலயம் ஸ்தலம் சுற்றுலாப்பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது.