மஹாகாளி கோவில், ஹிந்துக்களுக்கு மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களுக்கும் புகழ் பெற்ற புனித ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவில் குஜராத்திலுள்ள வடோடராவிற்கு 53 கி.மீ. தொலைவில் உள்ள பவாகத்தில் அமைந்துள்ளது.
தினசரி பல புனித காரியங்கள் நடக்கும் கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இங்குள்ள மூல கடவுளான மஹாகாளியின் ஆசீர்வாதத்தை பெறுவதற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவதுண்டு.
மஹாகாளி மாதா பயமுறுத்தும் தோற்றத்துடன் காட்சி அளித்தாலும், தன்னை தேடி வரும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்று நம்பப்படுகிறது. கல்வி சுற்றுலா வருவதற்கும் இது சிறந்த இடமாக விளங்குகிறது.
இந்த கோவிலில் இரண்டு தளங்கள் உள்ளன. கீழ் தளத்தில் மஹாகாளி மாதாவின் சிலை உள்ளது. கோவிலின் மேல் தளம் இஸ்லாமியர்களுக்கு புனிதமான இடமாக விளங்குகிறது. 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.