பாபா ராம்தேவ் கோயில் போக்ரான் நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்திலுள்ள ராம்தேவரா கிராமத்தில் உள்ளது. இந்த கோயிலின் வளாகத்தில் ராம்தேவ்ஜி எனும் ராஜஸ்தானிய நாட்டுப்புற கடவுளின் சமாதி உள்ளது.
ராஜபுத்திர அரசரும் யோகியுமான இந்த ராம்தேவ்ஜி 14ம் நூற்றாண்டை சேர்ந்தவராவார். தெய்வீகச்சக்திகளைப் பெற்றிருந்த இவரது கீர்த்தி அந்நாளில் எல்லா திசைகளிலும் பரவி இருந்ததாக சொல்லப்படுகிறது.
ஏழைகளுக்கும் கடைநிலையில் இருந்தோர்க்கும் இவர் வாழ்நாள் முழுக்க பாடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. இப்பிரதேசத்தில் வாழும் பல்வேறு இனத்தார் இந்நாளிலும் இவரை தங்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.
இந்த கோயிலில் நாம் தற்போது பார்க்கும் கட்டுமானம் 1931ம் ஆண்டு பிக்கானேர் கங்கா சிங் மஹாராஜாவால் கட்டப்பட்டுள்ளது. ராம்தேவ்ஜி யோகியார் தம் பூதவுடல் நீத்த ஸ்தலத்தின் மீதே இக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது.
ராம்தேவ்ஜியின் பிரதான சீடர்கள் சிலரது சமாதிகளும், ஐந்து முஸ்லிம் பிர் யோகிகளின் சமாதிகளும் கூட இங்கு இடம் பெற்றுள்ளன. இந்த பிர் யோகிகள் மெக்கா நகரிலிருந்து ராம்தேவ்ஜியின் ஆசிகளைப்பெற வந்துள்ளனர். அவர்கள் ‘ராம் ஷா பிர்’ என்று அவர்கள் சமூகத்தாரால் அழைக்கப்பட்டிருக்கின்றனர்.
இக்கிராமத்துக்கு அருகிலேயே ராம்ஸர் குளம் எனப்படும் ஒரு குளமும் அமைந்துள்ளது. பாபா ராம்தேவ் அவர்களாலேயே இந்த குளம் கட்டப்பட்டதாக மக்கள் நம்புகின்றனர்.
கோயிலுக்கு அருகில் உள்ள பார்ச்சா பாவ்ரி எனும் படிக்கிணறும் இங்குள்ள குறிப்பிடத்தக்க விசேஷமாகும். இந்த கிணற்று நீருக்கு தெய்விக மருத்துவ குணாம்சங்கள் உள்ளதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.