பாலாகர் என்ற பெயரில் அழைக்கப்படும் போக்ரான் கோட்டை14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு புராதன கோட்டையாகும். இது தார் பாலைவனத்தின் மத்தியில் வீற்றுள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வணிகப்பாதையில் இது அக்காலத்தில் இருந்திருக்கிறது. பர்சியா மற்றும் இன்ன பிற நாடுகளுக்கு இவ்வணிகப்பாதை வழியே முக்கிய வாசனைப்பொருட்கள், உப்பு மற்றும் பட்டு ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
ரத்தோர் வம்சத்தின் சம்பாவத் எனும் பிரிவின் தளபதிகளுக்கு இந்த கோட்டை சொந்தமாக இருந்துள்ளது. இதன் உன்னதமான கட்டிடக்கலை அம்சங்களும் வரலாற்றுப்பின்னணியும் இந்தியா மற்றும் உலக நாடுகளிலிருந்து பயணிகளை ஈர்க்கின்றன.
இந்த வளாகத்தில் சிவப்பு மணற்பாறைகளால் கட்டப்பட்ட அழகிய அரண்மனைகள், பழமையான ஜரோகாக்கள் மற்றும் கம்பீரமான கோபுரங்களை காணலாம். தற்போது போக்ரான் தாகுர் நரேந்திரசிங் மற்றும் அவரது துணைவியார் போக்ரான் தாகுராணி யஷ்வந்த குமாரி ஆகியோரின் உரிமையில் இக்கோட்டை உள்ளது.
இருப்பினும் அவர்கள் இக்கோட்டையை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்திருக்கின்றனர். முகலாய மற்றும் ராஜபுத்திர கட்டிடக்கலை அம்சத்துக்கு ஒரு கம்பீரமான உதாரணமாக இக்கோட்டை திகழ்கிறது.
இங்குள்ள அருங்காட்சியகத்தில் ராஜ வம்சத்தாரின் ஆயுதங்கள், உடைகள், ஓவியங்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது தவிர, இங்குள்ள பழமையான நூலகத்தில் போக்ரான் ராவ் பஹதூர் ராஜஷீ தாக்குர் செயின் சிங்க்ஜி அவர்களைப்பற்றிய புத்தகங்கள் உள்ளன.